ஊழல் குற்றச்சாட்டு.. மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைது
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அந்த நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நஜிப் ரசாக் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அவரை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுமார் 628 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு நிதியை தனது சொந்த கணக்கில் வரவு வைத்துக் கொளண்டதற்காக, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஜீப் ரசாக் மீது ஏற்கனவே இவ்வாண்டு மே மாதம் புதிய அரசாங்கம் அமைந்ததும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் அவரையும் அவரது மனைவியையும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
1957ம் ஆண்டு முதல் ஆளும் கட்சி கூட்டணியே மலேசியாவில் ஆட்சி அமைத்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வியை சந்தித்தார். மகாதீர் முகமது தலைமையிலான புதிய அரசு பழைய ஊழல் வழக்குகளை தோண்டி ஒன்றொன்றாக எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.