சுஷ்மாவுக்கு ஒரு ட்வீட் போட்டு அமீரகத்தில் கடத்தப்பட்ட சகோதரியை காப்பாற்றிய இந்தியர்
துபாய்: அமீரகத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் கடத்தப்பட்ட தனது சகோதரியை காப்பாற்றுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்வீட் போட்டு அவரை காப்பாற்றியுள்ளார் தேவ் தம்போலி என்பவர்.
தேவ் தம்போலி என்பவரின் 33 வயது சகோதரி விமான சிப்பந்தியாக ஆசைப்பட்டார். இதையடுத்து விமான சிப்பந்தி வேலை தேடி அவர் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு அவரை யாரோ கடத்தி அறையில் அடைத்து வைக்கப்பட்டது குறித்து தேவ்க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேவ் தனது சகோதரியை காப்பாற்றுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்வீட் செய்தார். அவரது ட்வீட்டை பார்த்த சுஷ்மா, அமீரகத்தில் உள்ள இந்திய தூதரிடம் இது குறித்து கவனிக்குமாறு தெரிவித்துள்ளேன். அவர் உங்களை தொடர்பு கொண்டு உதவி செய்வார் என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமீரகத்திற்கான இந்திய தூதர் டி.பி.சீதாராம் தேவ் தம்போலியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் தம்போலியின் சகோதரியை அல் அய்ன் போலீசாரின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார்.
We have rescued your sister with help of local Police. She is being moved to a shelter home run by Indian Embassy in Dubai. @Devtamboli
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 22, 2015
உள்ளூர் போலீசாரின் உதவியோடு உங்களின் சகோதரியை காப்பாற்றியாகிவிட்டது என்று சுஷ்மா ட்விட்டர் மூலம் தம்போலியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த சுஷ்மாவின் ட்வீட்,
உள்ளூர் போலீசாரின் உதவியோடு உங்களின் சகோதரியை காப்பாற்றிவிட்டோம். துபாயில் உள்ள இந்திய தூதரகம் நடத்தும் இல்லத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றார்.