அமெரிக்காவில் இந்தியர்களை தொடர்ந்து மாட்டிவிடுவது இந்திய வம்சாவழி வழக்கறிஞர் பிரீத் பஹாரா?
நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதன் பின்னணியில் இருப்பது இந்திய வம்சாவழி அட்டர்னியான பிரீத் பஹாராதான் காரணமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒபாமா அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற போது தென் நியூயார்க் மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் பஹாரா. அமெரிக்காவை மட்டுமின்றி உலகை உலுக்கிய பங்குச் சந்தை உள்பேர மோசடி வழக்கில் சிக்கியவர் இலங்கைத் தமிழர் ராஜரத்தினம். இந்த வழக்கில் இந்தியரான ரஜத் குப்தாவும் கைது செய்யப்பட்டார். இந்த உள்பேர வழக்கில் ரஜத் குப்தா கைது செய்யப்பட்ட போது அரசு தரப்பு வழக்கறிஞரான பிரீத் பஹாரா ஊடகங்களால் பாராட்டப்பெற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கூட உள்பேர மோசடி வழக்கில் இந்திய தொழிலதிபரான சந்தீப் அகர்வால் கைது செய்யப்பட்டதிலும் பிரீத் பஹாராதான் முக்கியப் பங்கு வகித்தவர். சந்தீப் அகர்வால், ஹரியானாவை சேர்ந்ஹ்டவர். shopclues.com என்ற இணையதளத்தின் நிறுவனரும் ஆவார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் உள்பேர மோசடி வழக்கில் 76வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் அகர்வாலுக்கு 25 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் இந்தியாவுக்கு அவர் நாடு கடத்தப்படவும் கூடும்.
இந்த நிலையில்தான் அமெரிக்க தூதரக அதிகாரி தேவ்ய்பானி கோப்ராகாடே விவகாரம் வெடித்தது. தேவ்யானி மீதான விசா மோசடி விவகாரத்திலும் தேவ்யானிக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞராக பிரீத் பஹாராதான் செயல்பட்டு வருகிறார். தற்போது தேவ்யானி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட இருக்கிறது.
இப்படி தொடர்ந்தும் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் பலரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரீத் பஹாராவினால் சிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது மத்திய அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரீத் பஹாரா தற்போது கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
பிரீத் பஹாரா, உள்நோக்கத்துடன் இந்திய தொழிலதிபர்களை இலக்கு வைத்து செயல்படுகிறாரா? அவருக்குப் பின்னால் இருக்கும் சக்தி எது? ஆகியவை தொடர்பாகவும் மத்திய அரசு விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறது.