இலவச பள்ளிக்ககூடம் தொடங்குகிறார் பேஸ்புக் நிறுவனரின் மனைவி!
நியூயார்க்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவி ப்ரிஸில்லா சான் 3 வயது முதல் பள்ளி இறுதியாண்டு வரை அனைவருக்குமான கல்வி அளிக்கும் வகையில் இலவச பள்ளியைத் தொடங்கவுள்ளார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்கின் மனைவி ப்ரிஸில்லா சான். இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் முன்னாள் பள்ளி ஆசிரியை.
இவர் கலிஃபோர்னியாவில், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள மென்லோ பார்க்கிற்கு அருகிலுள்ள கிழக்கு பாலோ அல்டோ மற்றும் பெல்லி ஹாவன் ஆகிய நகரங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக, 3 வயது சிறுவர்கள் முதல் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள் வரை அனைவருக்குமான இலவசக் கல்வியளிக்கும் The Primary School(TPS) என்ற பள்ளியைத் தொடங்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் 2016 முதல் இப்பள்ளி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதன் மூலம் அம்மக்களின் கல்வித் தரமும் வாழ்க்கைத் தரமும் உயரும் என்கிறார் சான்.
இது ஒரு புதுவிதமான பள்ளியாக இருக்கும். கல்வி மற்றும் ஆரோக்கியம் பற்றி இங்கு கற்றுக் கொடுக்கப்படும். ஏனேனில் ஆரோக்கியம் மற்றும் கல்வி ஒன்றோடன்று சம்பந்தப்பட்டது. ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருந்தால்தான் தரமான கல்வியை கற்றுக்கொள்ள முடியும் என்று ஜூக்கர் பெர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஆரோக்கியத்துடன் கூடிய கல்வி வழங்கும் நோக்கத்துடன் Ravenswood Family Health Centre என்ற நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவ சேவையும் வழங்க உள்ளனர்.
கடந்த சில வருடங்களில் அமெரிக்காவிலுள்ள பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மார்க்கும், அவர் மனைவியும் கிட்டத்தட்ட 120 மில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளனர். தற்போது சொந்தமாகவே பள்ளியும் தொடங்கிவிட்டனர்.