38 பேரை கொன்ற நர்ஸை திருமணம் செய்ய போட்டா போட்டி: என்ன கொடுமை சார் இது?
ரோம்: இத்தாலியில் 38 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸை திருமணம் செய்ய பலர் போட்டி போடுகிறார்கள்.
இத்தாலியில் உள்ள லூகோ நகரைச் சேர்ந்தவர் டேனியலா போகியாலி(42). அவர் அதே நகரில் உள்ள உம்பர்டோ மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். அவர் பொறுப்பில் இருந்த 86 நோயாளிகளில் 38 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் மரணம் அடைந்த 78 வயது பெண்ணின் உடலில் அளவுக்கு அதிகமாக பொட்டாஷியம் குளோரைட் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து தான் நோயாளிகளின் மர்ம மரணத்திற்கு டேனியலா தான் காரணமாக இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டேனியலாவை கைது செய்தனர்.
டேனியலாவை பொறுத்த வரை யார் யார் எல்லாம் எரிச்சல் ஊட்டும் வகையில் உள்ளார்களோ அவர்களை எல்லாம் அவர் பொட்டாஷியம் வைத்து கொன்றுள்ளார். பொட்டாஷியம் 48 மணிநேரத்திற்குள் உடலில் இருந்து மறைந்துவிடும் என்பதால் டேனியலா எளிதில் சிக்கவில்லை.
இந்நிலையில் டேனியலா பிணங்களுடன் செல்ஃபி எடுத்தது தெரிய வந்துள்ளது. ஒரு பெண் பிணத்திற்கு அருகே அவர் நின்று கொண்டு இரண்டு பெரு விரல்கைளை உயர்த்தியபடி செல்ஃபி எடுத்துள்ளார். மற்றொன்றில் வேறு ஒரு பிணத்திற்கு அருகே தலையை வைத்து வாயை திறந்தபடி போஸ் கொடுத்துள்ளார் டேனியலா.
இந்த புகைப்படங்கள் தற்போது மீடியாக்களுக்கு கிடைத்துள்ளது. இவற்றை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொலை வழக்கை எதிர்கொண்டு வரும் அவரை திருமணம் செய்து கொள்ள பலர் போட்டி போடுகிறார்கள். இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல?