மைக்கேல் ஷூமாக்கரின் மருத்துவ ஆவணங்கள் திருட்டு: விற்பனைக்கும் வந்துள்ளது
ஜெனிவா: கோமாவில் இருந்து மீண்டு வந்த பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் உடல் நலம் குறித்த ஆவணங்கள் திருடு போயுள்ளது.
பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரான்ஸில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் 6 மாதங்களாக கோமாவில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 16ம் தேதி நினைவு திரும்பியது.
சுவிஸ் மருத்துவமனை
ஷூமாக்கருக்கு நினைவு திரும்பிய உடனேயே அவரை கிரனோபல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆவண திருட்டு
ஷூமாக்கரின் உடல் நலம் குறித்த ஆவணங்கள் திருடு போயுள்ளதாக அவரின் மேனேஜர் சபின் கெஹ்ம் தெரிவித்துள்ளார்.
விற்பனை
திருடப்பட்ட ஷூமாக்கரின் ஆவணங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த ஆவணங்கள் ஷூமாக்கர் கோமாவில் இருந்தது பற்றியது என்று அதனை விற்பனை செய்பவர் தெரிவித்துள்ளார் என சபின் கூறியுள்ளார்.
நிஜமா
விற்பனைக்கு வந்துள்ள ஆவணங்கள் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் திருட்டு குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார் சபின்.
எச்சரிக்கை
திருட்டு ஆவணங்களை வாங்கினாலோ அல்லது அதில் உள்ள தகவல்களை வெளியிட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபின் எச்சரித்துள்ளார்.