விவசாயிகள் போராட்டம்... கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட்... உருவாக்கியது காலிஸ்தான் ஆதரவாளர்?
ஸ்டாக்ஹோம்: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட்டை உருவாக்கியது மோ தலிவால் என்ற காலிஸ்தான் ஆதரவாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் சுமார் இரண்டு மாத காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின், போராட்ட களங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது சுவீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். அதில் விவசாயிகள் போராட்டத்திற்கான டூல்கிட் என ஒன்றையும் இணைத்திருந்தார்.
வழக்குப்பதிவு
அந்த டூல்கீட்டிற்கு எதிராக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். தேச துரோகம், வெறுப்புப் பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளரான மோ தலிவால் என்பவர் அந்த டூல்கிட்டை உருவாக்கியிருக்கலாம் என்று டெல்லி போலீஸ் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த டூல்கிட்டில் குறிப்பிட்டிருந்தவாறே குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் குழப்பம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த மோ தலிவால்
காலிஸ்தான் ஆதரவு குழுவான போயடிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷனின் இணை நிறுவனர் தான் இந்த மோ தலிவால். கனடாவின் வான்கூவரில் அமைந்துள்ள ஸ்கைரோக்கெட் என்ற டிஜிட்டல் பிராண்டிங் கிரியேட்டிவ் ஏஜென்சியின் நிறுவனரும் இவர்தான். வன்முறையைத் தூண்டும் வகையிலிருந்த அந்த டூல்கிட்டை உருவாக்கி கிரேட்டா தன்பெர்க்கிடம் இவர் அளித்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். இது சர்ச்சையானதைத் தொடர்ந்து டூல்கிட்டுடன் இருந்த தனது ட்வீட்டை கிரேட்டா தன்பெர்க் டெலிட் செய்துவிட்டார்.
காலிஸ்தான் ஆதரவு
காலிஸ்தான் ஆதரவாளரான மோ தலிவால் கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோவும் தற்போது வைரலாகியுள்ளது. அதில், "விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படுவது நமது வெற்றி அல்ல. அங்குதான் நமது போர் தொடங்குகிறது. விவசாய சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் இந்த யுத்தம் முடிவடையும் என்று யாராவது உங்களிடம் சொன்னால், நம்பாதீர்கள். நாம் காலிஸ்தான் உணர்வையும் ஆதரவையும் ஒருநாள் நீங்கள் புரிந்துக்கொள்ளதான் வேண்டும்" என்று அவர் பேசினார்.
டூல்கிட்டில் என்ன இருந்தது
கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்திருந்த டூல்கிட்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது குறித்து விளக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஜனவரி 23ஆம் தேதி முதல் ட்விட்டரில் சில ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும் ஜனவரி 26ஆம் தேதி களத்தில் போராடும் விவசாயிகளுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், எந்தப் பிரபலங்களையும் விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக தாங்கள் ட்விட் செய்ய கேட்டுக்கொள்ளவில்லை என்று போயடிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன் விளக்கம் அளித்துள்ளது.