உலக நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் நட்சத்திரமாக திகழ்கிறது - தென்னாப்பிரிக்காவில் மோடி பெருமிதம்
பிரிட்டோரியா: உலக பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்கிறது என தென் ஆப்ரிக்காவில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதற்கட்டமாக நேற்று மொசாம்பிக் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதையடுத்து மெசாம்பிக் பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டாம் கட்டமாக பிரிட்டோரியா நகருக்கு வந்தார் மோடி. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸுமா, துணை அதிபர் சிரில் ரமபோஸா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பின்னர், இந்தியா-ஆப்பிரிக்கா தொழிலதிபர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் தொழில் துவங்கவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தென் ஆப்பிரிக்க நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான உறவு வரலாற்று ரீதியாக மிகவும் வலிமையுடன் உள்ளது.
தென் ஆப்ரிக்கா இந்தியாவின் முக்கிய வர்த்தக நண்பனாக உள்ளது. இருநாட்டு வர்த்தக உறவு 380 சதவீதம் உயர்ந்துள்ளது. வரலாற்று ரீ்தியாகவும் இந்தியா தென் ஆப்ரிக்கா இடையே வலுவான உறவு நிலவுகிறது. மேக் இன் இந்தியா திட்டம் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும். உலக நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.