மோர்சியின் ஆதரவாளர்களுக்கு 88 ஆண்டுகள் வரை சிறை... எகிப்து கோர்ட் உத்தரவு
கெய்ரோ: சமீபத்தில் மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரணதண்டனையை வழங்கப் பட்ட விவகாரத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் நேற்று 13 பேருக்கு 5 முதல் 88 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அளித்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதாக குற்றம் சாட்டி, எகிப்து அதிபர் முஹம்மது மோர்சிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக கடந்தாண்டு ஜூலை மாதம் ராணுவத்தால் மோர்சி பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
மோர்சியின் பதவியிறக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மோர்சியின் ஆதரவாளர்களான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கலவரம் மூண்டது.
இதையடுத்து, மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மூண்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் உள்ள பலர் மீது தேசத் துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எகிப்து நாட்டில் உள்ள பல் கோர்ட்டுகளில் வழக்கு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில் மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று எகிப்து நீதிமன்றம் ஒன்று மோர்சியின் 13 ஆதரவாளர்களுக்கு சுமார் 5 முதல் 88 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.