யு.எஸ்.: 5 வயது மகனை உப்பு கொடுத்து கொன்ற தாய்க்கு 20 ஆண்டு சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது 5 வயது மகனுக்கு அளவுக்கு அதிகமாக பல ஆண்டுகளாக உப்பு கொடுத்து அவரை கொலை செய்த தாய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்டுக்கி மாநிலத்தில் உள்ள ஸ்காட்ஸ்வில்லைச் சேர்ந்தவர் லேசி ஸ்பியர்ஸ்(27). அவரது மகன் கார்னட் பால் ஸ்பியர்ஸ்(5). லேசி தனது மகன் கைக்குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே அவருக்கு உப்பை கொடுத்து வந்துள்ளார். ஆண்டுக் கணக்கில் உப்பு கொடுக்கப்பட்டதால் சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து லேசி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தெரிவித்து வந்தார். அவருக்கு பிறரின் கவனத்தை ஈர்ப்பது பிடித்திருந்தது. இதனால் மகனுக்கு தொடர்ந்து அளவுக்கு அதிகமாக உப்பை கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நியூயார்க் நகரில் வீடு எடுத்து தங்கினார். அங்கு வந்ததும் சிறுவனின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான். சிறுவனின் உடலில் அளவுக்கு அதிகமாக சோடியம் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி லேசியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் லேசிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. லேசி ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அதிகபட்ச தண்டனையான 25 ஆண்டுகள் சிறை அவருக்கு விதிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.