குடிக்க கோக்கோ கோலா கேட்ட முஸ்லீம் பெண்ணை அவமரியாதை செய்த அமெரிக்க விமான நிறுவனம்!
சிகாகோ: அமெரிக்காவில் விமான பயணித்தின்போது குடிக்க கோக்கோ கோலா கேட்ட முஸ்லீம் பெண்ணுக்கு அது மறுக்கப்பட்டது. அதற்கான காரணமாக அந்த விமான நிறுவனத்தின் பணிப்பெண் கூறியதுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அந்த கோலா கேனை அப்பெண் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பது விமான நிறுவனம் தான் விதித்த தடைக்கு கூறிய காரணமாகும். ஆனால் இது இனவெறியால் விதிக்கப்பட்ட தடை என்று சர்ச்சை வெடித்துள்ளது. பலரும் விமான நிறுவனத்தின் செயலைக் கடுமையாக கண்டித்துள்ளனர். டிவிட்டரிலும், இதர சமூக வலைத்தளங்களிலும் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் தஹரா அகமது. இவர் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மத நம்பிக்கை துறையின் இயக்குநராக இருக்கிறார். இவர் சமீபத்தில் சிகாகோவிலிருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் பயணித்தார்.
அப்போது விமானப் பணிப்பெண்ணிடம் அவர் கோக்கோ கோலா கேன் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏன் என்று தஹரா கேட்டபோது அதை நீங்கள் ஆயுதமாக பயன்படுத்தி விட வாய்ப்புள்ளதாக பதில் வந்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் தஹரா.
அப்போது அருகில் இருந்த இன்னொரு பயணி, முஸ்லீம் துவேஷ கருத்துக்களைக் கூறி தஹராவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தால் பெரும் வேதனை அடைந்த தஹரா தனது கசப்பான அனுபவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார். தஹராவுக்கு நேர்ந்த அவமரியாதைக்கு டிவிட்டர், பேஸ்புக்கில் தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இதையடுத்து யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. நடந்த சம்பவம் தவறான புரிதலின் பேரில் நடந்தது. இதற்காக மன்னிப்பு கோருகிறோம் என்று அது கூறியுள்ளது.
ஆனால் ஒரு சாதாரண கோலாவுக்காக இப்படி மத துவேஷத்துடன் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நடந்து கொண்டது தன்னை வேதனைப்படுத்தி விட்டதாக தஹரா குமுறல் வெளியிட்டுள்ளார்.
தனது அனுபவம் குறித்து தஹரா கூறுகையில், முதலில் எனக்கு ஒரு பழைய, ஏற்கனவே திறந்திருந்த கோலா கேனைக் கொடுத்தார் அந்தப் பணிப்பெண். நான் அவரிடம் இது என்ன என்று கேட்டபோது, புத்தம் புதிய கோலா கேனை தர எங்களுக்கு அனுமதி இல்லை. அதை நீங்கள் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் தர முடியாது என்று கூறினார்.
ஆனால் எனக்கு அருகில் உள்ளவருக்கு திறக்கப்படாத பீர் கேனை கொடுத்தீர்களே என்று நான் கேட்டபோது அதற்கு அவரிடம் சரியான பதில் கிடைக்கவில்லை. எனக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு சக பயணிகளிடம் நான் கோரிக்கை விடுத்தபோது அனைவரும் என்னையும், என்னுடைய மதத்தையும் கிண்டல் செய்து பேசவே செய்தனரே தவிர ஆதரவாக யாரும் வரவில்லை.
மேலும் எனக்கு அருகில் இருந்த நபர் ஒருவர், ஏய் முஸ்லீம், வாயை மூடு. நீ அதை ஆயுதமாக பயன்படுத்துவாய்.. எனவே வாயை மூடிக் கொண்டு உட்கார் என்று கோபமாக கூறியது என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று கூறியுள்ளார் தஹரா.
தனக்கு நேர்ந்த அவமானத்தை விமான பயணத்தின்போதே பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்தார் தஹரா. அந்த போஸ்ட் தற்போது ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தை புறக்கணிப்போம் என்ற கோஷம் டிவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தஹராவுக்கு ஆதரவாக #unitedfortahera என்பதும் டிவிட்டரில் தற்போது டிரென்ட் ஆகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர் தஹரா என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய சமுதாயத்திற்காக இவர் ஆற்றிய பணிகளுக்காக வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமாவால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டவர் தஹரா. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் ஆப்கானிஸ்தானுக்ும் சென்று வந்தவர் இவர்.
அமெரிக்காவின் இரட்டை முகத்தையே தஹராவுக்கு நேர்ந்த அவமரியாதை வெளிப்படுத்துவதாக உள்ளது.