மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்: சரமாரி குண்டு வீச்சில் 5 பேர் பலி- பதற்றம்!
ஐய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம், தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடியாக சர்ஜிகல் ஸ்டிரக் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். மியான்மர் விமானப் படை வீசிய குண்டுகள் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளிலும் விழுந்து வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது.
Footage of the #Myanmar military airstrikes on CNF/A Camp Victoria captured from Mizoram's Farkawn village. It shows a bomb landing on India side of the border. https://t.co/uZSeZ1VfD9 pic.twitter.com/mlHO8bXqPN
— miZO zEITGEIST (@mizozeitgeist) January 10, 2023
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ரோஹிங்கியா முஸ்லிம்கள், சின் பழங்குடிகள் உள்ளிட்டோர் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சின் பழங்குடி மக்களின் சின் தேசிய ராணுவம், மியான்மரில் கூட்டாட்சியை வலியுறுத்துகிற ஆயுத குழுவாகும்.
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் சின் பழங்குடிகள் பெரும்பானமையினராக உள்ளனர். சின் பழங்குடிகள், வங்கதேசம் மற்றும் மியான்மரில் கணிசமாக உள்ளனர். மூன்று நாடுகளில் உள்ள சின் பழங்குடிகளிடையே கொள்வினை- கொடுப்பினை உறவு முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. வங்கதேசம், மியான்மரில் அரசியல் சூழ்நிலைகளால் தொடர்ந்து வாழ முடியாத சின் இன மக்கள், மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் சின் பழங்குடிகள் மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்தது. இத்தடையை பொருட்படுத்தாமல் மிசோரம் மாநில அரசு சொந்த ரத்த உறவுகளான சின் இனமக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.
மிசோரம் மாநில எல்லையில் சின் தேசிய ராணுவம் என்ற ஆயுத குழுவின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் பல நூறு சின் தீவிரவாதிகள் ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றனர். மியான்மரின் சின் மாகாணத்தில் மியான்மர் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை சின் தேசிய ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதனையடுத்து சின் தேசிய ராணுவத்தினரை ஒடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக மிசோரம் மாநில எல்லையில் சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா-மியான்மர் எல்லையான மிசோரமில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மியான்மர் ராணுவத்தின் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் இந்திய மிசோரம் மாநிலத்துக்குள் ஊடுருவி தஞ்சம் அடைந்துள்ளனர். மியானர் விமானப் படை வீசிய குண்டுகள் இந்திய எல்லைக்குள் விழுந்து வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் மிசோரம் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது,