மேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்.. மக்களிடம் கேட்ட நாசா.. என்ன காரணம்?
வானத்தில் இருக்கும் மேகங்களை புகைப்படம் பிடித்து அனுப்பும்படி நாசா நிறுவனம் மக்களிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது.
நியூயார்க்: வானத்தில் இருக்கும் மேகங்களை புகைப்படம் பிடித்து அனுப்பும்படி நாசா நிறுவனம் மக்களிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது.
நாசாவின் ''எர்த் ரேடியன்ட் எனர்ஜி சிஸ்டம்'' என்ற செயற்கைக்கோள் செய்யும் ஆராய்ச்சிக்கு உதவியாக இப்படி போட்டோக்களை கேட்டு இருக்கிறது. சாதாரண மொபைல் போனில் போட்டோ பிடித்து அனுப்பினால் போதும்.
அமெரிக்கர்களிடம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இருக்கும் எல்லோரிடமும் புகைப்படத்தை கேட்டு உள்ளது. சென்னை தொடங்கி, குமரியில் வாட்ஸ் ஆப் பார்க்கும் மக்கள் கூட நாசாவிற்கு புகைப்படம் அனுப்ப முடியும்.
செயற்கைகோளை அனுப்பி இருக்கிறது
பூமியில் நடக்கும் கால நிலை மாற்றங்களை கண்டுபிடிக்க ''எர்த் ரேடியன்ட் எனர்ஜி சிஸ்டம்'' என்ற செயற்கைக்கோளை நாசா அனுப்பி இருக்கிறது. இந்த செயற்கைகோள் தொடர்ந்து மேகங்களை ஆராய்ந்து, கால நிலை எப்படி மாறும் என்று குறிப்பிடும். மேகங்களை ஆராய்ந்து மட்டுமே இது கால நிலையை கண்டுபிடிக்கும்.
மிகவும் கஷ்டம்
அமெரிக்காவில் மட்டுமில்லாமல் பூமி முழுக்க இது மேகங்களை ஆராயும். ஆனால் இந்த செயற்கைக்கோளுக்கு மேகங்களுக்கும், புகைக்கும், பனிக்கும் வித்தியாசம் தெரியாது. இதனால் அது அனுப்பும் ஆராய்ச்சி முடிவுகளில் சில சமயம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மக்கள் எடுக்க வேண்டும்
இதனால் தற்போது மக்களை மேகங்களின் புகைப்படத்தை எடுத்து அனுப்பும்படி நாசா கூறியுள்ளது. இதன் மூலம் மேகங்களை எளிதாக ஆராய முடியும். நாம் எடுக்கும் புகைப்படம் எந்த பகுதியில் எடுத்தது என்று மட்டும் நாசாவிடம் கூறவேண்டும். நம் புகைப்படத்தையும் செயற்கைகோள் அனுப்பிய புகைப்படத்தையும் வைத்து நாசா சோதனை செய்து கொள்ளும்.
அப்ளிகேஷன்
இதற்காக ''குளோப் அப்சர்வர்'' என்ற அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாம் எடுக்கும் புகைப்படங்களை இதில் பதிவேற்றினால், அதையும் செயற்கைகோள் அனுப்பும் புகைப்படத்தையும் வைத்து நாசா வானிலையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். அந்த ஆராய்ச்சி முடிவுகள் நம்முடைய மெயில் ஐடிக்கும் அனுப்பப்படும்.