நாட்ராம்பள்ளியில் விழுந்தது விண்கல்தானா?.. இன்னும் உறுதிப்படுத்தாத நாசா
நாசா: வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விழுந்தது விண்கல்தானா என்பதை இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6ம் தேதி நாட்ராம்பள்ளியில் நடந்த இந்த மர்ம சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர். விழுந்தது விண்கல் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவும் அதையேக் கூறியுள்ளார்.
சம்பவத்தின் போது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் கல்லால், 4 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த கல் சிதறல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நீலமும் கருப்பும் கலந்ததாக அந்தக் கல் உள்ளது.
இந்த நிலையில் அது விண்கல்தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நாசா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
நாசா ஆராய்ச்சி...
இதுகுறித்து நாசாவின் செய்தித் தொடர்பாளர் லாரி கான்டில்லோ கூறுகையில், ‘நடந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அதுகுறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்கிறார்.
முதல் மனிதப்பலி...
சம்பவத்தன்று விண்கல் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் நின்று கொண்டிருந்த பஸ் டிரைவர் காமராஜ் என்பவர்தான் அந்தசம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் ஒரு மாணவர், 2 தோட்டக்காரரக்ள் காயமடைந்தனர்.
வெடிகுண்டு சத்தம்...
இதுகுறித்து கல்லூரி முதல்வர் பாஸ்கர் கூறுகையில், ‘பெரிய குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டது. வழக்கத்திற்கு விரோதமான சத்தம் அது. கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரத்திற்கு இது கேட்டுள்ளது.
கண்ணாடிகள் உடைந்தன...
இந்த சம்பவத்தால் வகுப்பறை கண்ணாடிகள் உடைந்து விட்டன. கார், பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து விட்டன. வகுப்புகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன' எனத் தெரிவித்துள்ளார்.
வரலாறு...
இது குறித்து நாசாவின் இன்னொரு அதிகாரியான லின்ட்லி ஜான்சன் கூறுகையில், ‘அறிவியல்பூர்வமாக இதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததாக வரலாற்றில் பதிவில்லை. எனவே நடந்திருந்தால் இதுதான் முதல் மனிதப் பலியாக இருக்கும்' என்றார்.
டைனோசர்கள் அழிந்தது...
கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் விண்கற்கள் விழுந்ததில் டைனோசர்கள் கூட்டமாக கூண்டோடு அழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மெக்சிகோவில் மிகப் பெரிய பள்ளத்தாக்கும் ஏற்பட்டது.
விண்கல் விபத்துக்கள்...
இவை மட்டுமின்றி இன்னும் ஏகப்பட்ட விண்கல் விபத்துக்கள் பூமியில் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூமியில் விழுந்த விண்கற்கள் குறித்த விபரங்களுக்கு:
http://www.icq.eps.harvard.edu/meteorites.html