பாகிஸ்தானில் மேலும் 9 கைதிகளுக்கு தூக்கு! 4 மாதத்தில் 48 பேர் தூக்கிலிடப்பட்டனர்!!
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் இன்று 9 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். கடந்த 4 மாதங்களில் மொத்தம் 48 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் ராணுவ பள்ளிக் கூடம் ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் பல்வேறு தீவிரவாதம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை தூக்கிலிடும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மும்முரமாக நிறைவேற்றி வருகிறது.
தூக்கு தண்டனையை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அதிபரிடம் அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலையில் மட்டும் 9 பேருக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை மொத்தம் 48 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.