கெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்!
சீனாவில் கெட்டுப்போன சோளமாவு நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீஜிங்: சீனாவில் கெட்டுப்போன பழைய சோளமாவு நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ளது ஜிக்சி நகர். அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் புளித்த சோள மாவு கலந்து வீட்டில் தயாரித்த நூடுல்ஸை தங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்துள்ளனர். ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் வைக்கப்பட்டிருந்த அந்த நூடுல்ஸை கடந்த 10ம் தேதி அவர்கள் எடுத்து சமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முந்தைய நூடுல்ஸ் என்பதால் அதில் சூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் சுவாச நச்சுத்தொகையான போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு உண்டாகியுள்ளது. இது தெரியாமல் குடும்பத்துடன் அந்த நூடுல்ஸை அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
இதனால் அக்குடும்பத்தினர் அனைவருக்கும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி 9 பேர் உயிரிழந்து விட்டனர்.
நூடுல்ஸ் தான் காரணம்
ஆரம்பத்தில் இவர்களது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த போது, அவர்களது இரப்பை திரவத்தில் போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு கண்டுபிடிக்கப்பட்டது. அது அவர்கள் சாப்பிட்ட கெட்டுப் போன சோள மாவு நூடுல்ஸ் மூலம் உண்டானதும் தெரிய வந்ததாக அம்மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தப்பிய குழந்தைகள்
கெட்டுப் போன சோளமாவு நூடுல்ஸால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, எப்போதும் நூடுல்ஸ் என்றால் விருப்பமாகக் குழந்தைகள் சாப்பிடுவார்கள். ஆனால், சம்பவத்தன்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்துள்ளன. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் மட்டும் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போங்க்ரெக்கின் அமிலம்
போங்க்ரெக்கிக் அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதனால் தான் கெட்டுப் போன உணவைச் சாப்பிடக் கூடாது எனக் கூறுகிறார்கள்.
விழிப்புணர்வு இல்லை
அதிலும் சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதற்கு ஒன்றும் ஆகாது என்ற தவறான நம்பிக்கையில் அதனை மக்கள் சாப்பிடுவதாகவும், எனவே சீனாவில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியா
கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் மட்டும் இதுபோன்ற உடல் உபாதைகளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு 288 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அதில் 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.