அது கிடக்குது ரபேல்... பிரான்ஸ் பறக்கிறார் நிர்மலா சீதாராமன்.. பாதுகாப்பு அமைச்சரை சந்திக்கிறார்
Recommended Video
பாரீஸ்: ரபேல் பூதம் இந்தியாவையே வியாபித்து மிரட்டி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸுக்குச் செல்லவுள்ளார். அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி-யை சந்தித்துப் பேசவுள்ளார்.
இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், கூட்டு ராணுவப் பயிற்சி குறித்தும், மேற்கு ஆசியா - இந்தோ பசிபிக் பிராந்திய நிலவரங்கள் குறித்தும் இரு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதிக்கவுள்ளனராம்.
முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே போட்டுள்ள அணுகுண்டால் இந்திய அரசியலே பரபரப்பாகிக் கிடக்கிறது. பிரதமர் மோடியைக் குறி வைத்து காங்கிரஸ் ஆவேசமாக விமர்சித்து வருகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் போகவுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் வருடா வருடம் சந்தித்துப் பேசுவது என்று இரு நாடுகளுக்கிடையே பேசி முடிவாகியுள்ளதால் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இரு நாடுகள் பாரீஸில் இருப்பார் நிர்மலா சீதாராமன். அப்போது அதிபர் இம்மானுவல் மேக்ரானையும் நிர்மலா சீதாராமன் சந்திப்பார். இதையடுத்து அவர் அதற்கு அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்கிறார். அங்கு ஆசியான் அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பிரெஞ்சு பயணத்தின்போது இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும், இந்திய பாதுகாப்புத் துறையில் பிரான்ஸின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்துப் பேசவுள்ளனர்.
கடந்த பல வருடமாக இந்தியா அதிக அளவில் பிரான்ஸிடமிருந்துதான் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்து வருகிறது. 2013-2017 கால கட்டத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.