அடம்பிடித்த சீனா... என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை சேர்ப்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை!
சியோல்: சீனாவின் கடுமையான எதிர்ப்பால் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவின் கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
48 உறுப்பு நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால்கூட புதிதாக விண்ணப்பிப்பவர்கள் உறுப்பினராக முடியாது. இந்தியாவை உறுப்பினராக்க தொடக்கம் முதலே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
முன்னதாக இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக சியோலில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்திலும் கருத்து ஒற்றுமை உருவாகவில்லை.

அணு ஆயுதப் பரவல் தடை
சீனாவைப் பொறுத்தவரை இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் சேர்க்கக்கூடாது என்கிறது.

பாகிஸ்தானையும் சேர்க்கனும்
அப்படி இந்தியாவுக்கு சிறப்பு விலக்கு அளித்தால் பாகிஸ்தானையும் உறுப்பினராக்குங்கள் என்பதும் சீனாவின் நிலைப்பாடு. என்.எஸ்.ஜி. சிறப்புக் கூட்டத்தில் பேசிய சீனாவின் வாங் குன், இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி வழங்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜின்பிங்கிடம் நேரில் கோரிக்கை
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராக நேரடியாக ஜின்பிங்கிடம் மோடி ஆதரவு கோரியிருந்தார்.

தொடர் அடம்பிடித்த சீனா
ஆனாலும் சீனா தொடர்ந்து அடம்பிடித்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை சேர்க்கவே கூடாது என்றது. ஆகையால் இன்றைய கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications