"உக்ரைன் போரில் யார் வெல்வார்கள் தெரியுமா!" ஜெர்மனியில் பிரதமர் நரேந்திர மோடி பரபர! என்னாச்சு
பெர்லின்: ஜெர்மனி நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் போர் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் செல்கிறார். 3 நாள் பயணமாகப் பிரதமர் மோடி, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணிக்கிறார்.
நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்தா?.. 4 நாட்களாக காணவில்லை? பிரபல இயக்குநர் பரபரப்பு பதிவு!
இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து கிளம்பினார். முதலில் அவர் ஐரோப்பிய நாடுகளில் முக்கிய நாடான ஜெர்மனிக்குச் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி
ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லின் செல்கிறார். இன்று மதியம் இரு நாடுகளுக்கும் இடையே 6ஆவது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமை தாங்கினர். இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தும் முன்பு, இரு நாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் ஆலோசனை நடத்தினர். இரு நாட்டு உறவை மேம்படுத்த இது முக்கிய பயணமாக இருக்கும்.
முக்கிய சந்திப்பு
இந்த சந்திப்பு குறித்து வெளியான அறிக்கையில், "இந்த சந்திப்பு இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டணி, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை இது உள்ளடக்கியது" என்று கூறப்பட்டுள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பிற்குப் பின்னர், ஒரு உயர்மட்ட வட்ட மேஜை மாநாடு நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஸ்கோல்ஸ் இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்தியா குழு
இந்த மாநாட்டில் இரு தரப்பு அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தியக் குழுவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஜெர்மனி அதிபராகக் கடந்த 2021 டிசம்பரில் பதவியேற்ற பின்னர், ஷோல்ஸை பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த மாநாட்டிற்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பசுமை மற்றும் நிலையான எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
9 ஒப்பந்தங்கள்
இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின்னர் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே அமைதி நிலவ வேண்டும் என்றும், இந்தியா என்றென்றும் அமைதியின் பக்கமே நிற்கிறது என்றும் கூறினார். ரஷ்யா - உக்ரைன் போரில் எந்த நாடும் வெற்றிபெறாது என்று கூறிய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பேச்சுவார்த்தையே ஒரே தீர்வு
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "இப்போது நடைபெறும் புவிசார் அரசியல் சம்பவங்கள் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆபத்தான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. இப்போது அனைத்து நாடுகளும் எப்படி ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதைத் தான் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என்று நாங்கள் கூறியுள்ளோம். இந்த போரில் நிச்சயம் யாரும் வெற்றி பெற மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
ஜெர்மனி அதிபர்
இதே கூட்டத்தில் ஜெர்மனி அதிபர் ஷோல்ஸ் கூறுகையில், "உக்ரைன் மீதான தாக்குதலின் மூலம், ரஷ்யா சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறியுள்ளது. உக்ரைனில் பொதுமக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல் மூலம் ஐ.நா. சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா மீறியுள்ளது தெரிகிறது. விளாடிமிர் புதின், இந்த முட்டாள்தனமான போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். உக்ரைனில் இருக்கும் ரஷ்யப் படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றார்.