வட கொரியாவை ஸ்தம்பிக்க வைத்த இன்டர்நெட் துண்டிப்பு.. 9 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் கனெக்ஷன்!
பியாங்யாங்: சோனி பிக்சர்ஸ் நிறுவன கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்ட பின்னணியில், வட கொரியாவில் அதிரடியாக இணையதள தொடர்புகள் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்குப் பிறகே அங்கு தற்போது இணையதள தொடர்புகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தி இன்டர்வியூ என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இது ஒரு காமெடிப் படமாகும். அதில் இரண்டு செய்தியாளர்கள் சேர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை கொலை செய்வது போல காட்சி வருகிறது.
இதுகுறித்து தெரிய வந்த வட கொரியா அதிர்ச்சியும், கோபமும் அடைந்தது. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அது சோனியை எச்சரித்தது. ஆனால் திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று சோனி அறிவித்தது. இந்த நிலையில் திடீரென சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்ர் கட்டமைப்பு ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து வட கொரியவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று வட கொரியா பதிலளித்தது.
ஹேக் செய்யப்பட்டதன் எதிரொலியாக படத்துக்கு திரையரங்குகள் தர பல மால்களும் தயக்கம் காட்டின. சினிமார்க், சினிப்ளெக்ஸ், ரீகல் சினிமாஸ், ஏஎம்சி போன்ற வட அமெரிக்க சினிமா அரங்குகளில் படத்தின் பிரிமியர் நிறுத்தப்பட்டுவிட்டது. உடனே, தி இன்டர்வியூ படத்தை வெளியிடுவதை ரத்து செய்தது சோனி.
இந்த நிலையில் அதிரடியாக வட கொரியா முழுவதும் இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மணிக்கணக்கில் இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் வட கொரியாவில் எந்த இணையதளத்தையும் காண முடியவில்லை. கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு இணையதளங்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு வட கொரியர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த திடீர் இருட்டடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்று இணையதள கட்டமைப்புகளை கண்காணித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டின் (Dyn) நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் தற்போது இணையதள சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக டின் கூறியுள்ளது.
இந்த திடீர் துண்டிப்புக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், அமெரிக்காவின் பதிலடி ஹேக்கிங்கும் கூட காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்க அரசைச் சேர்ந்த யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சோனி நிறுவனம் மீதான ஹக்கிங் குறித்து கோபத்துடன் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சோனி மீதான சைபர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
வட கொரியாவில் திங்கள்கிழமையன்றே இணையதள சேவை சரியில்லை என்றும் ஸ்திரமில்லாமல் இருந்ததாகவும், திங்கள்கிழமையின் இறுதியில் முழுமையாக சேவை துண்டிக்கப்பட்டதாகவும் டின் கூறியுள்ளது. தற்போது நிலைமை இயல்புக்குத் திரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இரும்புத் திரை நாடாக திகழ்ந்து வருவது வட கொரியா. தென் கொரியாவுடன் தீவிர மோதலில் இருந்து வருகிறது. சர்வாதிகார தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நாட்டில் வெகு சிலரே இணையதள தொடர்புகளை வைத்துள்ளனர். இந்த நாட்டுக்கான இணையதள போக்குவரத்து சீனா வழியாகத்தான் நடந்து வருகிறது.
சீனாவின் யுனிகாம் என்ற நிறுவனத்தின் இணையதள சேவையை மட்டுமே வட கொரியா பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் சர்வர் அமெரிக்காவில் உள்ளது.