பரம எதிரியாக இருந்த கியூபாவுக்கு செல்லும் ஒபாமா: உச்சு கொட்டும் கியூபா வம்சாவளி அமெரிக்கர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு செல்ல உள்ளது அமெரிக்காவில் வசிக்கும் கியூபா மக்களுக்கு பெரிய ஆச்சரியமாக ஒன்றும் இல்லை.
அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. இந்நிலையில் கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சியையும் செய்தார்.
இதையடுத்து 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதே போன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒபாமா கியூபா செல்வார் என்று பல மாதங்களாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஒபாமா இரண்டு நாட்கள் பயணமாக மார்ச் மாதம் கியூபா தலைநகர் ஹவானா செல்வதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மயாமி நகரில் வசிக்கும் கியூபாவை சேர்ந்தவர்கள் பலருக்கு காஸ்ட்ரோ சகோதரர்களை பிடிக்கவில்லை. அவர்களுக்கு ஒபாமா ஹவானா செல்வது கவலை அளித்துள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் கியூபாவை சேர்ந்தவர்களுக்கு ஒபாமா ஹவானா செல்வதால் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒபாமா கியூபா செல்வதால் ஒரு பலனும் இல்லை என்று அமெரிக்காவில் வசிக்கும் கியூபாவை சேர்ந்த கார்லோஸ் நயா தெரிவித்துள்ளார்.
கேப்ரியல் புயல்லோ என்ற கியூபா வம்சாவளி அமெரிக்கர் கூறுகையில்,
ஒபாமா கியூபா செல்வது அங்குள்ளவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கும். நாங்கள் அங்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
அமெரிக்கா-கியூபா இடையே இத்தனை ஆண்டுகளாக உறவு சரியில்லாவிட்டாலும் இந்தியா-கியூபா இடையேயான உறவு நன்றாக உள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபா அதிபராக இருக்கையில் இருந்தே அவர் இந்தியாவுடன் நட்பு பாராட்டினார். 1992ம் ஆண்டு கியூபாவில் மக்கள் உணவுக்கு அல்லாடியபோது இந்தியா தான் உணவு அளித்து காப்பாற்றியது. மேலும் கியூபாவுக்கு நிதியுதவியும் செய்தது.