அச்சத்தில் ஆழ்த்தும் ஓமிக்ரான் அதி வேகமாக பரவுமாம் - மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
தென் ஆப்ரிக்காவில் ஒரே நோயாளியிடம் இருந்து புதிய வகை வைரஸ் உருவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் இப்போதே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜெனிவா: டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தடுப்பூசிகளை தாண்டி தாக்கக் கூடியது என்பதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 26 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 23 கோடி பேர் மீண்டுள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சற்றே இயல்பு நிலைக்கு உலக மக்கள் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் புதிய வகை கொடிய கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பி.1.1.529 என்ற அறிவியல் பூர்வ பெயரை கொண்டது இந்த வைரஸ். மற்ற வைரஸ் பிறழ்வுகளிலேயே மிக மோசமாக 50 பிறழ்வுகளை இந்த புதிய வகை வைரஸ் கொண்டிருப்பதே பீதிக்கு காரணமாகும்.
உலகை பயமுறுத்தும் புது வகை கொரோனா வைரசின் பெயர் ஓமிக்ரான்! பெயர் சூட்டிய ஹூ! அர்த்தம் என்ன தெரியுமா
அதி வேகமாக பரவும்
இந்தியாவில் பெரும் உயிர் பலியை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய டெல்டா வைரசில் கூட இவ்வளவு பிறழ்வுகள் இல்லை என்பதால், புதிய வைரஸ் மிகவும் கவலை தரக்கூடியதாக இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சக்தி மிக்க வைரஸ்
இந்த வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம், தற்போது, உலகில் உள்ள தடுப்பூசிகளின் வீரியத்தை தாண்டி பாதிக்கலாம், அதிக உயிர் பலிகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் நுழையும் சக்தி கொண்டதாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
தடுப்பூசிக்கு கட்டுப்படுமா
புதிய கொரோனாவின் முள் புரதத்தில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த முள்ளை பயன்படுத்தி தான் வைரஸ்கள் மனித உடலுக்குள் நுழையும், நோய் மண்டலத்தை தாக்கும். எனவே, கொரோனா தடுப்பூசிகள் அனைத்துமே இந்த புரதத்தை குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய கொடிய வகை வைரஸ் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
புதிய வைரஸ் ஒமைக்ரான்
புதிதாக பரவி வரும் இந்த வைரஸ் பற்றி ஆலோசிக்க, உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியது. நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வரிசையில் தற்போது புதிய வைரசுக்கு 'ஓமிக்ரான்' என்று பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஆய்வு
இதுவரை நாம் பார்த்ததில் கவலை அளிக்கிற வைரஸ் இதுதான் என்று இங்கிலாந்து சுகாதார முகமையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார்.இந்த வைரஸ் முதன்முதலாக காணப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் கவுடெங்கில் 'ஆர் வேல்யூ' என்று சொல்லப்படுகிற இதன் பரவல் விகிதம் 2 ஆக உள்ளது. இது உண்மையிலேயே மிகவும் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
6 நாடுகளுக்குத் தடை
இந்த வைரஸ் பரவல் தடுப்பதற்காக தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசொத்தோ, எஸ்வாத்தினி ஆகிய 6 நாடுகளின் விமானங்களை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி விட்டது. புதிய உருமாறிய வைரஸ் மிகவும் கவலை அளிக்கிறது, இதனால்தான் தென் ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களை தடை செய்திருக்கிறோம் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தைப் போன்று ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
விமான நிலையங்களில் கட்டுப்பாடு
இதற்கிடையே புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களையும், இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி உள்ளது.
Recommended Video
பிரதமர் ஆலோசனை
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக 50 சதவீதம் மட்டுமே செயல்திறன் கொண்டதாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், புதிய வகை வைரசுக்கு எதிராக கோவாக்சினின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் தடுப்பூசி குறித்தும் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர்.