இந்தியாவில் பரவும் டெல்டா கொரோனா வைரஸ்.. ஒரு வகை மட்டும் அதிக கவலையை தருகிறது.. உலக சுகாதார மையம்
ஜெனீவா: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய B.1.617 டெல்டா கொரோனாவில் ஒரு வகை மட்டுமே கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்ற 2 வகைகளால் பெரியளவில் ஆபத்து இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டிருந்தது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் கொரோனாவின் தீவிர தன்மை மிக மோசமாக இருந்தது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையும் முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.
கொரோனா 2-வது அலையில் நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவர் சங்கம்
உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் மிக மோசமான நிலைக்குச் செல்ல முக்கிய காரணங்களில் ஒன்றாக B.1.617 உருமாறிய கொரோனா பார்க்கப்படுகிறது. B.1.617 கொரோனாவை மும்முறை மரபணு மாறிய கொரோனா என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த மாதம் இந்த உருமாறிய கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவித்திருந்தது. அதாவது சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வகையைவிட வேகமாகப் பரவுகிறது அல்லது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இந்தியா
இந்நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய B.1.617 டெல்டா கொரோனாவில் ஒரு வகை மட்டுமே கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், "இந்தியாவில் நிலைமை கையை மீறிச் சென்றதற்கு உருமாறிய B.1.617 டெல்டா கொரோனா வகைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேநேரம் மற்ற வகை கொரோனா பெரியளவில் வேகமாகப் பரவுவதில்லை" என தெரிவித்துள்ளது.
ஆய்வுகள் கட்டாயம்
இந்த உருமாறிய கொரோனா வகை பரவும் நாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த நாடுகளுக்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உருமாறிய கொரோனா வகை குறித்த ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வியட்நாமில் கண்டறியப்பட்ட கொரோனா
அதேபோல வியட்நாம் நாட்டில் தற்போது கண்டறியப்பட்ட கொரோனா வகை குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "அதுவும் B.1.617.2 டெல்டா கொரோனாவின் ஒரு வகை என்றே நாங்கள் கருதுகிறோம். அதில் கூடுதலாக ஒரு புரோத ஸ்பைக் மட்டும் உள்ளது. இந்த B.1.617.2 வகை கொரோனா மிக வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டது. இதன் காரணமாகக் குறைந்த நேரத்தில் அதிகப்படியான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள், இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என் தெரிவிக்கப்பட்டுள்ளது.