வரிந்து கட்டும் எதிர்கட்சிகள்..இடியாப்ப சிக்கலில் இம்ரான் கான்! மக்களுக்கு உரையாற்றும் திட்டம் ரத்து
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே நாட்டு மக்களிடையே உரையாற்றும் திட்டத்தை இம்ரான் கான் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானனில் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைமையிலான கூட்டணியின் முக்கிய கட்சியான முட்டாஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தான் (MQM-P) எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்தது.

பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கானுக்கு 342 என்ற கீழ்சபையில் 172 வாக்குகள் தேவையான நிலையில் அவரை வீழ்த்த, எதிர்க்கட்சிகளுக்கு 175 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் ஜமியத் உலமா-இ-இஸ்லாமா ஃபஸ்லின் (JUI-F) தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெஹ்பாஸ் ஷெரீப் இம்ரான் கானை பதவியிலிருந்து நீக்கிய பின்னர் நாட்டின் அடுத்த பிரதமராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

வலியுறுத்தும் எதிர்கட்சிகள்
"சகிப்புத்தன்மை மற்றும் உண்மையான ஜனநாயக அரசியலுக்கு நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க விரும்புகிறோம்" என்று MQM-P தலைவர் காலித் மக்பூல் சித்திக் செய்தியாளர்களிடம் கூறிய நிலையில், பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதால் இது ஒரு முக்கியமான நாள் என்று கூறியஷெரீப் , பிரதமர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தாலும், நம்பிக்கை இழந்துள்ளதாக புதிய ஆட்சி அமைக்க பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.

புதிய பிரதமர்
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி, எதிர்கட்சிகளுக்கு கிடைத்துள்ள MQMஇன் ஆதரவு இம்ரான் கானுக்கு எதிரான திட்டத்தில் பெரிய வளர்ச்சி என்றும், இதன் மூலம் பிரதமர் பெரும்பான்மையை இழந்துள்ளார் என்றும் கூறினார். "பிரதமருக்கு வேறு வழியில்லை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார். அடுத்த பிரதமராக ஷெரீப் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் திரு.பூட்டோ-சர்தாரி கூறினார். இந்நிலையில் ஆளும் கூட்டணியின் மற்றொரு கூட்டணி கட்சியான பலுசிஸ்தான் அவாமி கட்சி (பிஏபி) கீழ்சபையில் ஐந்து உறுப்பினர்களுடன் திங்களன்று இம்ரான்கானுக்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சியின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக" அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உரை ஒத்திவைப்பு
இதற்கிடையில் புதன்கிழமை மாலை மக்களிடையே பேச திட்டமிடப்பட்ட இம்ரான் கானின் உரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இதனை செனட்டர் பைசல் ஜாவேத் கான் உறுதிப்படுத்தியுள்ளார். "பிரதமர் இம்ரான் கானின் இன்றைய தேசத்திற்கான உரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது," என்று அவர் ட்வீட் செய்துள்ளார். முன்னதாக, உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித், பிரதமர் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும், நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பார் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications