பெஷாவர் தாக்குதல் எதிரொலி... துப்பாக்கி வைத்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு பாக். அனுமதி!
பெஷாவர்: பெஷாவர் பள்ளித் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாண அரசு அங்குள்ள தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் கடந்த 16-ம்தேதி புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில், 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர்.
உலகையையே உறையச் செய்த இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்க ஆலோசனை நடத்தி வருகிறது பாகிஸ்தான் அரசு. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாண அரசு அங்குள்ள தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க உள்ளது.
ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் வேலையில் அம்மாகாண அரசு ஈடுபட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த மாகாணத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைப்பதற்கு அனுமதி கேட்டு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், முந்தைய தாக்குதல் போன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்கவும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அனுமதி கோரியுள்ள பள்ளிகளுக்கு போலீஸ் மற்றும் உள்துறை அதிகாரிகள் இடம்பெறும் குழு ஒன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும். பின்னர் அப்பள்ளிக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது தவிர கூடுதல் பாதுகாப்பிற்குத் தேவையான பாதுகாப்பு காவலர்களை பணியமர்த்துதல் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு என்று மாகாண தரப்பில் இருந்து தெரிவிக்கப் பட்டுள்ளது.