ஏலேலோ ஐலசா: சைபீரிய விமானத்தை தம்கட்டி தள்ளிய பயணிகள்
மாஸ்கோ: ஓடுதளத்தில் உள்ள உறைபனியில் சிக்கிய விமானத்தை கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பயணிகள் தள்ளிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சைபீரியா, ரஷ்யாவில் பனிக்கொட்டுவதால் திரும்பும் திசை எல்லாம் பனிக்காடாக உள்ளது. இந்நிலையில் சைபீரியாவைச் சேர்ந்த விமானம் ஒன்றுரஷ்யாவில் இருந்து கிளம்புகையில் ஓடுதளத்தில் உறைபனியில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்த பயணிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கீழே இறங்கி விமானத்தை தள்ளினர். இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் விமானத்தை சில மீட்டர்கள் தள்ளினோம் என்று பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனியில் சிக்கிய சைபீரிய ஏர்லைன்ஸைச் சேர்ந்த கடிகேவியா என்ற விமானம் 74 பயணிகளுடன் மாஸ்கோவில் இருந்து 2,800 கிமீ தொலைவில் உள்ள இகார்காவில் இருந்து சைபீரியாவில் உள்ள க்ராஸ்னோயார்ஸ்க் நகருக்கு சென்றது.
பனி அதிகமாக இருந்ததால் விமானத்தின் சாஸிஸ் பிரேக் உறைந்துவிட்டதாகவும், விமானத்தை டோ டிரக்கால் நகர்த்த முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.