அமெரிக்காவில் பெரியார் பிறந்த நாள் விழா.. மாணவர்கள் பேச்சுப் போட்டி!
டெட்ராய்ட்(யு.எஸ்): அமெரிக்காவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பல நகரங்களில் கொண்டாடப்பட்டுள்ளது. மிஷிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் மாநகரத்தின் புறநகர்ப் பகுதியான ஆபர்ன் ஹில்ஸ் நகரில், அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் பெரியார் 139 வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப் பட்டது.
சுமார் 20 பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி விழாவின் சிறப்பு அம்சமாக இருந்தது. 'யார் பெரியார்?', 'நான் பெரியார் பேசுகிறேன்' , 'பெரியாரின் சமூகப் புரட்சி','பெரியாரின் பெண்ணியம்' ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் முழங்கினார்கள்.
பெரியாரின் முற்போக்கு கருத்துக்களை அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்களான, குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த போட்டி நடத்தப் பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழும் ஆறுதல் பரிசும் வழங்கப் பட்டன. வெற்றியாளர்களுக்கு, சான்றிதழுடன் ரொக்கப் பரிசும் இருந்தது. விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
விழாவில்
- நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்,
- நவோதயா பள்ளிகளைத் திறக்கும் முயற்சியும், மறைமுகமாக
இந்தியைத் திணிக்கும் செயல்களும் கைவிடப்படவேண்டும்,
- கருத்துரிமை பாதுகாக்கப்படவேண்டும், மற்றும்
- விவசாயிகள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரியார் கருத்துகளின்
தேவை இப்போது இருப்பதாகவும், இதுபோன்ற மேலும் பல நிகழ்வுகளை
ஒருங்கிணைக்க வேண்டும் என்று விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள், பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்களை வலியுறுத்தினார்கள்.
ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட 'பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்- அமெரிக்கா' என்ற அமைப்பு, அமெரிக்காவில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களை பரப்பும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருவருடைய கருத்துக்களையும் தமிழர்கள் மட்டுமல்லாது மற்றும் பிற இனத்தவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், மாதந்தோறும் சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு சமகாலச் சமூக அரசியல் பிரச்சினைகளைப் பற்றி பல் வழி தொலைபேசி அழைப்பு மூலம் சிறப்புரை ஏற்பாடு செய்யப்படுகிறது. இறுதியில் கேள்வி -பதிலும் இடம் பெறும்.
பெரியார் பிறந்தநாளையோட்டி, இந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அமெரிக்காவில் பெரியார்-அம்பேத்கர் பெயரில் படிப்பு வட்டம் அமைத்து செயல்படுத்தி வரும் ஒருங்கிணைப்பாளர்களை பாராட்டினார். பெரியார், அம்பேத்கர் கருத்துகளின் தேவை, நீட் தேர்வு,
இன்றைய சூழலில் திராவிடம் உள்ளிட்ட பல கருத்துக்களை முன் வைத்தார். பங்கேற்பாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் திருமாவளவன் பதிலளித்தார்.
வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 23ம் தேதி, நியூ ஜெர்ஸியில் மருத்துவர் சோம இளங்கோவன் முன்னிலையில் சிறப்பு கருத்தரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ' பெரியாரும் பெண்ணியமும்' , 'பெரியாரும் தமிழ்மொழியும்' போன்ற பலதலைப்புகளில் அமெரிக்கத் தமிழர்கள் உரையாற்ற உள்ளார்கள் . இந்நிகழ்ச்சியில் 'என் பார்வையில் பெரியார்' எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களும் பேசவுள்ளனர்.
- இர தினகர்