டென்ஷனைக் குறைத்தால்தான் உறவு சீர்படும்... ஷெரீப்புக்கு மன்மோகன் அறிவுரை
நியூயார்க்: எல்லைப் பகுதியில் பதட்டத்தைக் குறைத்தால்தான் இரு நாட்டு உறவுகள் சிறப்பாக இருக்க முடியும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
நியூயார்க் வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நேற்று பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே சமீப காலமாக நிலவி வரும் இறுக்கம் மற்றும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் நடந்தது.
இந்த சந்திப்பின்போது எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும், எல்லைப் பகுதியில் பதட்டத்தைக் குறைக்க வேண்டும், வன்முறையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை பிரதமர் மன்மோகன் சிங் ஷெரீப்பிடம் முன்வைத்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வன்முறை மற்றும் பதட்டத்தைக் குறைக்க இரு தரப்புமே ஒப்புக் கொண்டன. இதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாகவும் இரு தரப்பும் முடிவெடுத்துள்ளன.
மேலும், இரு நாட்டுப் பிரதமர்களும் அடுத்தவர் நாட்டுக்கு விஜயம் செய்யவும் ஒப்புக் கொண்டனர். இருப்பினும் இந்த பயண தேதி அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தரப்பு உறவும் தொடர வேண்டுமானால், சிறப்பாக இருக்க வேண்டுமானால் இருநாட்டு எல்லைப் பகுதியிலும் அமைதி நிலவ வேண்டியது அவசியம், வன்முறை குறைய வேண்டியது அவசியம் என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர், ஏற்றுக் கொண்டனர்.
பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் சுமூகமாக இருந்தது. பயனுள்ளதாக இருந்தது. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையின் பலன் போகப் போகத்தான் தெரியும்.
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகக் காரணமாக அமைந்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications