எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி.. இன்னும் மீளாமல் தவி்க்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஆர்க்டிக் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனி மற்றும் அங்கிருந்து கிளம்பி வரும் பனிக் காற்று மற்றும் குளிர் காற்று காரணமாக இன்னும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் நடுநடுங்கிப் போய்க் கிடக்கின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
அமெரிக்காவின் பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்து போய்க் கிடக்கின்றன. விமா்னங்களை இயக்க முடியவில்லை. ரயில்களை ஓட்ட முடியவில்லை. சாலைகள், தெருக்கள், வீடுகள் என எங்கு பார்த்தாலும் ஐஸ் கட்டிகள் குவிந்து மலை போல கிடக்கின்றன.
வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டு உறைந்து போய்க் கிடக்கிறது.
தொழில் பாதிப்பு
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனி நிலவுவதால், எந்தவிதமான வேலையையும் செய்ய முடியவில்லை. தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
2500 விமானங்கள் பாதிப்பு
கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட விமானங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்கள் ஓடவில்லை. பல பகுதிகளில் ரயில்கள் பல மணி நேரம் தாமதாக ஓடுகின்றன. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
பயங்கர குளிர்
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், குறிப்பாக கிழக்குப் பகுதிகள் அனைத்தும் நடு நடுங்கியபடி உள்ளன. இங்கு அன்டார்டிகா, அலாஸ்காவை விட கடுமையான குளிர் அடிக்கிறது.
வீடு இல்லாதவர்களின் நிலை பரிதாபம்
வீடு இல்லாமல் அரசு அமைத்துக் கொடுக்கும் ஷெல்டர்களில் தங்கியிருப்போர் நிலைதான் பரிதாபமாக உள்ளதாம். அங்கு பெருமளவில் மக்கள் தங்கியிருப்பதால் இட வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
44 ஆண்டுகளில் இப்பத்தான் பயங்கரக் குளிர்
கடந்த 44 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு குளிரான நிலையை அமெரிக்கா சந்தித்ததில்லை என்கிறார்கள்.
உறைந்து கிடக்கும் முக்கிய நகரங்கள்
அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் அனைத்துமே முடங்கிப் போயுள்ளன. வாஷிங்டனில் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைந்து உள்ளது. பிட்ஸ்பர்க், டெட்ராய்ட், சிகாகோ, பாஸ்டன், நியூயார்க் என எல்லா நகரமும் குளிருகிறது.
80 பேர் தங்குமிடத்தில் 179 பேர்
நியூயார்க்கின் போவரி மிஷன் ஷெல்டரில் 80 பேர் வரை தங்கலாம். ஆனால் அங்கு தற்போது 179 பேர் குவிந்துள்ளனர். இதனால் அதிகாரிகள் தடுமாறிப் போயுள்ளனர். இதனால் மிஷனரியின் அனைத்துப் பகுதியிலும் மக்களை தங்க வைத்துள்ளனர்.
உறைந்து போன நீர்நிலைகள்
அமெரிக்காவின் பெரும்பாலான ஏரிகள் உறைந்து போயுள்ளன. நீர் நிலைகளைக் காணவே முடியாத நிலை உள்ளது. கடற்கரைகளிலும் கூட ஐஸ் கட்டிகள் குவிந்து கிடக்கின்றன.
மிச்சிகன் ஏரி முற்றிலும் உறைந்தது
பிரபலமான மிச்சிகன் ஏரி முற்றிலும் உறைந்து ஐஸ் ஏரியாக மாறியுள்ளது. இதைப் படம் எடுக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மரங்கள் எல்லாம் ஐஸ் கட்டிகளாக காணப்படுகின்றன. அப்படி மூடிக் கிடக்கிறது ஐஸ் கட்டிகள்.
நடமாட்டமே இல்லை
பல பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. காரணம், குளிருக்கு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.