மாயமாகும் விமானங்கள்... தானாகவே தகவல் தரும் ஆட்டோமேட்டிக் டிராக்கிங்: கத்தார் ஏர்வேஸ் முடிவு
தோஹா: மலேசிய விமான விபத்துக்கள் போன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்கும் விதமாக தனது அனைத்து விமானங்களிலும் ஆட்டோமேட்டிக் டிராக்கிங் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது கத்தார் ஏர்வேஸ்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. கடலில் இருந்து அதன் பாகங்களும், பயணிகளின் உடல்களும் மீட்கப் பட்டு வருகின்றன. அதே போல், கடந்தாண்டு மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், இன்னமும் அந்த விமானத்தின் பாகங்களோ அல்லது அதில் பயணம் செய்தவர்களின் உடல்களோ எதுவும் மீட்கப் படவில்லை. மாயமான அந்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.
இவ்வாறு விபத்தில் சிக்கும் விமானங்களின் கறுப்புப் பெட்டிகள் கிடைத்தால் மட்டுமே விபத்திற்கான காரணங்கள் தெரிய வருகின்றன. அதற்கு முன்னதாக மாயமான விமானங்கள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு யூகங்கள் வெளிவருவது குழப்பத்தை அதிகரிக்கிறது.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் விதமாக கத்தார் ஏர்வேஸ் புதிய முறை ஒன்றை அறிமுகப் படுத்துகிறது. அதாவது விமானம் புறப்பட்டதில் இருந்து அது சென்றடைவேண்டிய இடத்தை அடையும் வரை தானாகவே தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் ஆட்டோமேட்டிக் டிராக்கிங் எனும் வசதியை தனது விமானத்தில் அது அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கத்தார் ஏர்வேஸின் தலைமை செயலதிகாரி, அக்பர் கூறுகையில், ‘இது தொடர்பாக நாங்கள் மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைமுறைக்கு வந்தால், இவ்வாறு விமானங்களில் ஆட்டோமேட்டிக் டிராக்கிங் வசதியை ஏற்படுத்திய முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை கத்தார் ஏர்வேஸ் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.