சவுதி அரேபியாவுக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது!
சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது.
தோகா: சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டிப்பதாக அறிவித்ததையடுத்து கத்தார் அரசு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. மேலும் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களும் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளன.
கத்தாரில் இருந்து தூதர்களை 48 மணிநேரத்தில் திரும்பப்பெறப் போவதாக தெரிவித்துள்ள பஹ்ரைன் அரசு, அங்குள்ள கத்தார் மக்களையும் வெளியேற ஆணையிட்டுள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு மக்களும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
சேவையை நிறுத்திய எதிஹாட்
இதைத்தொடர்ந்து ஐக்கிய அரவு அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் கத்தாருடனான விமான சேவையை நிறுத்துவதாக தெரிவித்தள்ளது. முக்கிய வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் கத்தாருடனான தொடர்பை துண்டித்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிஹாட் நிறுவனம் தெரிவித்தது.
மற்ற நாடுகளும் முடிவு
இதேபோல் துபாய் எமிரேட்ஸ் உட்பட மற்ற மூன்று வளைகுடா நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களின் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
கத்தாரின் அதிரடி நடவடிக்கை
இந்நிலையில் சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல்
இதனால் இருநாட்டு மக்களும் தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் சர்வதேச சந்தையில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.