ஆறுமாதத்தில் காங்கிரஸ் கட்சி ஜொலிக்குமாம்... பஹ்ரையினில் ராகுல் நம்பிக்கை பேச்சு!
புதிய மாற்றங்கள், வாக்குறுதிகளால் 6 மாதத்தில் காங்கிரஸ் கட்சி ஜொலிக்கும் என்று அந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மனாமா (பஹ்ரைன்): காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பேச்சுக்களில் புதிய வசீகரம் தெரிகிறது. பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, முதல்முறையாக பஹ்ரைனில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு முன்னாள் ராகுல் பேசியுள்ளார். அப்போது, 6 மாதத்தில் ஜொலிக்கும் புதிய காங்கிரஸ் கட்சியை நீங்கள் பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.
எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்கப்போவதாக உறுதியாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராகுல், ஆளும் மத்திய அரசு மக்களை மதம் என்ற பெயரில் பிளவு படுத்தியுள்ளாதாக குற்றம்சாட்டினார். வேலையில்லாத இளைஞர்களின் கோபத்தை உணர்ந்துகொள்ளாத அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களைக்கொண்டு வந்து, நாட்டில் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக மாற்றப்போகிறோம். இந்தியாவில் பிரச்னை இல்லாமல் இல்லை, நாட்டின் பிரச்னைகளை தீர்க்க, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் பங்களிக்கவேண்டும் என்று கூறிய ராகுல், மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து, புதிய சமுதாயத்தை கட்டமைக்க இணைந்து செயல்படவேண்டும் என்றார்.
சரிந்து போன பாஜக செல்வாக்கு
அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தல் குறித்து பேசிய ராகுல், குஜராத் மண்ணில் பாரதிய ஜனதா கடும் சரிவை சந்தித்துள்ளது. சிறிய இடைவெளியில் வெற்றிபெற்றாலும், அந்த கட்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
3 அம்சங்களை அரசு வழங்க வேண்டும்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உலக மையத்தின் சார்பில் பஹ்ரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பங்கேற்று பேசிய ராகுல், மூன்று அம்சங்கள் முக்கியம் என குறிப்பிட்டார். வேலை வாய்ப்புகளை உறுவாக்குவது, வலுவான சுகாதார கட்டமைப்பை உண்டாக்குவது, சிறப்பான கல்வி திட்டம் இந்த மூன்றையும் நல்ல அரசு கொண்டுவரவேண்டும் என்றார்.
அரசு கவனம் செலுத்த வேண்டியவை
இந்தியா என்ற அமைப்புக்கு தற்போது அச்சுறுத்தல் எழுந்துள்ளது. வேலையின்மை, மதம் என்கிற பெயரில் பிரித்தாளும் கொள்கை இந்த இரண்டு பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, மதரீதியாக இளைஞர்களை மோதவிட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது என்றார் ராகுல்.
கோபத்தில் மக்கள்
"இந்தியாவின் பிரச்னையை தீர்க்க உங்களால் முடியும், அதற்கான பாலமாகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்" என ராகுல் பேசினார். மத்திய அரசு வேலைவாய்ப்புகளை உறுவாக்க தவறியதால், வீதிகளில் நடந்து செல்லும்போது கோபம் கொண்ட மக்கள் வாழும் பகுதிகளில் கலவரமான சூழல் நிலவுவதை கண்டுவருவதாக ராகுல் குறிப்பிட்டார்.