இந்தியாவுக்கு தலைவலியாக மாறும் தாலிபான்கள்.. வரிசைகட்டி நிற்கும் பிரச்னை- மத்தியஅரசின் திட்டம் என்ன
டெல்லி: ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றும்பட்சத்தில் காஷ்மீர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் அது இந்தியாவுக்குப் பிரச்சினையாகவே இருக்கும் என்பதால், இதை மத்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் நாட்டில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் அங்கிருந்த அமெரிக்கப் படைகள் பார்த்துக்கொண்டன. இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.
மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி
அதன்படி வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஆப்கனில் இருந்து ஒட்டுமொத்தமாக அமெரிக்கப் படைகள் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை காலம் இதற்காகக் காத்திருந்த தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தனது தாக்குதலைத் தொடங்கிவிட்டது.
தாலிபான் ஆதிக்கம்
ஆப்கானிஸ்தானில் மொத்தம் 407 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 85% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாகவும் தற்போதுள்ள அரசிடம் வெறும் 15% பகுதி மட்டுமே உள்ளதாகத் தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 24 மணி நேரத்திற்குள் தாலிபான்கள் 13 மாவட்டங்களைக் கைப்பற்றினர். அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன் சரண்டர் ஆகச் சென்ற 22 ராணுவ அதிகாரிகளைத் தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர். தாலிபான்களின் இதுபோன்ற மூர்க்கத்தனமான தாக்குதல் அதிகரித்துள்ளதாக தற்போதுள்ள ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
கை கழுவும் அமெரிக்கா
சொல்லப்போனால், அமெரிக்க அதிபர் பைடனே தங்கள் படைகள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினால் கண்டிப்பாக அங்கு வன்முறை அதிகரிக்கும் எனக் கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார். ஆனாலும் கூட ஆப்கன் - தாலிபான் பிரச்சினையைக் கை கழுவவே அமெரிக்கா விரும்புகிறது. தாலிபான்களுடன் அமெரிக்கா நடத்திய அமைதி பேச்சுவார்த்தை கைகொடுக்காமல் போனபோதும், ஆப்கன் அரசு தாலிபான்களுடன் அமைதியான முறையில் தங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டது அமெரிக்கா.
எங்கள் வேலை இல்லை
இதற்கு அமெரிக்க அதிபர் பைடன் சொல்லும் காரணம் வினோதமானது. அதாவது ஆப்கன் நாட்டை கட்டியெழுப்ப அமெரிக்கப் படைகள் அங்குச் செல்லவில்லை என்றும் ஒசாமாவை கொன்று, அல் கொய்தா இனி அமெரிக்காவைத் தாக்க முடியாதபடி அவர்களைப் பலவீனப்படுத்தவே அமெரிக்கப் படைகள் ஆப்கன் சென்றதாகக் கூறுகிறார். ஆனால், அமெரிக்கப் படைகளை ஆப்கன் அனுப்பிய போது, "எந்தவொரு குழப்பம் ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படாத நிலையான மற்றும் வலுவான அரசை ஆப்கனில் கட்டியெழுப்புவதே நோக்கம்" என அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம் அதிகரிக்கும்
ஆனால், இனி அமெரிக்கா தனது நிலைப்பாட்டை இப்போதைக்கு மாற்றிக் கொள்ளாது. அதாவது வரும் காலங்களில் தாலிபான்களின் ஆதிக்கம் நிச்சம் ஆப்கனில் அதிகரிக்கும். இது அமெரிக்காவுக்கு வேண்டுமானால் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், இதனால் இந்தியாவுக்கு, குறிப்பாகக் காஷ்மீர் பகுதியில் அதிக குழப்பத்தை உருவாக்கும் என்றே இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
முதல் பிரச்சினை
அமெரிக்க படைகள் ஆப்கன் நாட்டிலிருந்த போது, அங்கு இந்தியா பல்வேறு உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளன. தாலிபான்களுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதில்லை என பாகிஸ்தான் கூறி வந்தாலும்கூட, பாக் உளவுத் துறை பின்னால் இருந்து தாலிபான்களுக்கு உதவுவதாகவே பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஆப்கனிலுள்ள இந்தியச் சொத்துக்கள், இந்தியக் கட்டிடங்களைக் குறிவைத்துத் தாக்கும்படி தாலிபான் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. இது இந்தியாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள முதல் பிரச்சினை.
நல்லதல்ல
இத்தனை காலமாக ஆப்கனில் அமைந்திருந்த அரசை இந்தியா ஆதரித்தே வந்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தாலிபான்கள் உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசு இந்தியா ராணுவ உதவியை நாடலாம் என்று இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் பரித் மமுண்ட்சே கூறியிருந்தார். ஆனால், அதன் பிறகு சில நாட்களிலேயே தற்போதுள்ள ஆப்கன் அரசுக்கு இந்தியா உதவுவது நல்லதல்ல என தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார்.
சீனா & பாகிஸ்தான்
இதற்கு அடுத்து அவர் கூறியதை தான் மிகவும் முக்கியமானதாகப் பார்க்க வேண்டும். அதாவது, "கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் ஆப்கன் மக்கள் மிக கடுமையான துன்பத்தை எதிர் கொண்டுள்ளனர். நாட்டை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் மற்றும் அனைத்து நாடுகளின் உதவியும் தேவை. அடுத்து ஆப்கனில் அமையவிருக்கும் அரசு பல நாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் ஒரு களமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று அவர் கூறியிருந்தார்.
தனிமைப்படுத்தும் முயற்சி
தற்போதைய சூழலில் எந்த ஒரு நாட்டிற்கும் உதவி செய்யும் வலிமை என்பது அமெரிக்கா அல்லது சீனாவுக்கு மட்டுமே உள்ளது. ஆப்கனை கட்டமைக்க வேண்டியது அமெரிக்காவின் வேலை இல்லை என்று அமெரிக்க அதிபர் பைடன் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். எனவே, தற்போதைய சூழலில் சீனாவால் மட்டுமே தாலிபான் தலைமையில் அமையும் ஆப்கன் அரசுக்கு உதவ முடியும். பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானுக்கு உதவும். அதேநேரம் பாகிஸ்தான் நாட்டில் சீனாவின் ஆதிக்கம் கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவு தூரம் அதிகரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே, தெற்கே இலங்கை துறைமுகத்தைத் தன்வசப்படுத்தியுள்ள சீனா, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம் இந்தியாவைத் தனிமைப்படுத்த முயலும். இது அடுத்த பிரச்சினை.
காஷ்மீர்
அதேபோல கடந்த 1996 முதல் 2001 வரை ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி இருந்த போதுதான், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்ததாகவும் பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, மீண்டும் அமையும் தாலிபான்கள் 2.o ஆட்சியில் காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கு மற்றொரு தலைவலியாக உருவெடுக்கலாம்.
அமெரிக்க ஆயுதங்கள்
இது அனைத்தையும்விட பாதுகாப்புத் துறையில் முக்கியமான பிரச்சினை இந்தியாவுக்கு உருவாகியுள்ளது. அதாவது ஆப்கன் அரசின் ராணுவ படையினரைத் தோற்கடிக்கும் தாலிபான்கள், அவர்களிடம் இருக்கும் அமெரிக்க ஆயுதங்களையும் கைப்பற்றுகின்றனர். இவை வரும் காலத்தில் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளின் கைகளுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஏற்கனவே, காஷ்மீரில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்காவின் எம் -4 ரக துப்பாக்கிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மில்லியன் டாலர் கேள்வி
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களை எதிர்கொள்வது என்பது இந்திய ராணுவத்தின் கடைசி விருப்பமாகவே இருக்கும். இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால், தாலிபான்களை மத்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.