இஸ்ரேலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஜெருசலேம்: இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இரு நாடுகளுக்கான உறவினைப் பலப்படுத்தும் விதமாக சுற்றுப் பயணம் புறப்பட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் சென்றடைந்தார்.
முன்னதாக மொனாக்கோ நாட்டில் நடைபெற்ற சர்வதேச போலீஸ் அமைப்பான "இன்டர்போல்" அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்றார்.
மாநாட்டுக்குப் பின்னர் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மொனாக்கோ நகரில் இருந்து இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமுக்கு ராஜ்நாத் சிங்கின் விமானம் புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
வானிலை சீரடைந்த பின்னர் மொனாக்கோ நகரில் இருந்து புறப்பட்ட ராஜ்நாத் சிங் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணிக்கு ஜெருசலேம் நகரை சென்றடைந்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற எல்.கே அத்வானியில் இஸ்ரேல் பயணத்திற்குப் பின்னர் இஸ்ரேலுக்கு வருகை தரும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை நேரம் மாற்றமடைந்ததால் அவருடன் இன்று நடத்தவிருந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலை இஸ்ரேல் அரசு நாளை மாற்றி அமைத்துள்ளது.
"இந்தியாவுடனான நட்பு எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய உள்துறை அமைச்சரின் வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இந்த பேச்சுவார்த்தை இனிமையாகவும், உபயோகமான ஒன்றாகவும் அமைந்து இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத் தொடர்புகள் பலப்படுத்தப்படும் என்று நம்புகின்றோம்" என்று இஸ்ரேல் அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதிபர் ருயுவென் ரிவ்லின், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அந்நாட்டின் ராணுவ மந்திரி மோஷே யாலூன் ஆகியோரை நாளை சந்திக்கும் ராஜ்நாத் சிங் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை புதுப்பிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவத் தளவாடங்களின் இறக்குமதியில் முதன்மை வகிக்கும் நாடு இந்தியா. இதனால், மோடியின் "மேக் இன் இந்தியா" கொள்கையின் அடிப்படையில் அத்தளவாடங்களை இந்தியாவில் சிறிய அளவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.