தாக்குதலை திடீரென தீவிரப்படுத்திய ரஷ்யா.. சீறி பாய்ந்த 75 ஏவுகணைகள்.. நிலைகுலைந்த உக்ரைன்.. பலர் பலி
கீவ்: உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யா 75 ஏவுகணைகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. மேலும் இதில் பொதுமக்களும் உயிரிழந்தனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாடு சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
இருந்தாலும் உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என நினைத்த ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதனால் போர் நீடித்துக்கொண்டே செல்கிறது. எனினும் தற்போது சில நாட்களாக உக்ரைனில் அமைதியான சூழலே நிலவியது.
பாகிஸ்தான் பூச்சாண்டிக்கு பதிலடி ரெடி.. ட்ரோன்களை தாக்கி அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி
பாலம் தகர்ப்பு
இந்த நிலையில் நேற்று முன் தினம் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஒரே பாலமாக இருந்த கெர்ச் பாலம் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி வெடித்து சிதறியது. இதில், பாலத்தின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதற்கு உக்ரைன் நாடு தான் காரணம் என்று ரஷ்யா அடித்து கூறியது. மேலும் பாலத்தில் உடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணியை ரஷ்யா முடுக்கி விட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று போக்குவரத்து தொடங்கி விட்டது.
கோபமடைந்த ரஷ்யா
இருந்தாலும் கெர்ச் பாலத்தில் நடந்த வெடி விபத்துக்கு உக்ரைன் தான் காரணம் என்றும்.. தீவிரவாதிகள் போல உக்ரைன் செயல்படுகிறது என்றும் ரஷ்யா குற்றம்சாட்டியது. அதோடு விடாமல் இந்த விவகாரத்தில் உக்ரைன் மீது கடும் கோபமடைந்த ரஷ்யா இன்று காலை திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் நகரம் உள்பட பல இடங்களில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் சீறிப் பாய்ந்தன. இதனால் கடந்த சில நாட்களாக அமைதியான சூழல் நிலவிய உக்ரைன் நாடு போர்க்களமாகியது.
கீவ் நகரத்தில் மட்டும் 6 ஏவுகணைகள்
உக்ரைனில் பல இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடைபெற்றது. கீவ் நகரின் முக்கிய பகுதிகளில் தக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அந்த நகரின் மேயர் தெரிவித்துள்ளார். நகரின் முக்கிய கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ரஷ்யாவின் தாக்குதல் தரைமட்டமாகி இருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைனின் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கீவ் நகரத்தில் மட்டும் 6 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால், அந்த நகரம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
காலை 8.15 மணிக்கு
அதேபோல், உக்ரைனின் முக்கிய நகரங்களான டினிப்ரோ, ஜபோரிஜியா, க்ரிவி ரிஹ், ஒடேசா உள்ளிட்ட மேலும் பல நகரங்களிலும் தாக்குதல் நடைபெற்றதாக உக்ரைன் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. உக்ரைன் நேரப்படி இந்த தாக்குதல் காலை 8.15 மணிக்கு நடைபெற்றது. பரபரப்பான காலை நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலால் உக்ரைன் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
பூமியில் இருந்து அகற்ற நினைக்கிறது
ஒரே நாளில் சுமார் 75 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 5 பேர் இதுவரை உயிரிழந்ததாக உக்ரைன் துணை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், பூமியில் இருந்து உக்ரைனை ரஷ்யா நீக்க நினைக்கிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் சேதமடைந்துள்ளது' என்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் வசம் இருந்த கிரிமியா தீபகற்ப பகுதியை ரஷ்யா தன் வசம் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.