''மூன்றாம் உலகப் போரை ஆரம்பிக்க விரும்புகிறது ரஷ்யா'' - உக்ரைன் பிரதமர்
கீவ்: "ரஷ்யா உலகில் ஒரு புதிய போரை, ஆரம்பிக்க விரும்புகிறது. அதாவது 3வது உலகப் போரை தொடங்க முயல்கிறது" என்று உக்ரைன் நாட்டுப் பிரதமர் அர்செனி டெய்சென்யுக் கூறியுள்ளார்.
தனது ராணுவ மற்றும் அரசியல் பலத்தால் உக்ரைனை ஆக்கிரமித்து புதிய போரைத் தொடங்க முயல்கிறது ரஷ்யா என்பதும் இவரின் குற்றச்சாட்டாகும்.
தனது இடைக்கால அமைச்சரவையின் கூட்டத்தில் அர்செனி பேசுகையில், " 2ம் உலகப் போரை உலகம் மறக்கவில்லை. ஆனால் ரஷ்யாவோ 3 ஆவது உலகப் போருக்குத் திட்டமிடுகிறது" என்றார். மேலும் அவர், " ராணுவ ரீதியாக உக்ரைனில் அது செய்யும் முயற்சிகள் ஐரோப்பாவில் ராணுவ மோதலை ஏற்படுத்தவே வழி வகுக்கும் " என்றார் அவர்.
அவர் பேசுகையில், "தீவிரவாதிகளை ரஷ்யா ஆதரிக்கிறது. ஒரு கூலிப்படை போல அது செயல்படுகிறது. உக்ரைன் தேர்தலை சீர்குலைக்க அது முயற்சிக்கிறது. உக்ரைன் அரசை ஒன்றும் இல்லாமல் ஆக்கி ஆக்கிரமிக்க அது முயல்கிறது" என்றார் அவர்.
கடந்த பிப்ரவரி மாதம் அர்செனி பிரதமர் பதவியை ஏற்றார். அது முதலே உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் பெரும் போராட்டங்களில் குதித்தனர். இதன் விளைவாக கிரீமியா தனியாகப் பிரிந்து போய் விட்டது. தற்போது அது ரஷ்யாவுடன் இணைய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் நாட்டை விட்டுத் தப்பி ரஷ்யாவுக்கு வந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே மே 25 ஆம் தேதி உக்ரைனில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
யனுகோவிச்சுக்குப் பதில் புதிய அதிபர் இந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.