உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் இரவிலும் குண்டு மழை...இது ஒரு கொலை என தெரியாதா - ஜெலன்ஸ்கி
பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் குண்டு வீசுவது கொலை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கீவ்: நமது பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களை குண்டுவீசித் தாக்கப் போவதாக ரஷ்யா அறிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை பொதுமக்கள் வசிக்கும் நமது நகரங்களில் உள்ளன. இது ஒரு கொலை. எந்த உலகத் தலைவரும், எந்த மேற்கத்திய அரசியல்வாதியும் இன்று அதற்கு எதிர்வினையாற்றுவதை நான் பார்க்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது. கீவ், கார்கிவ் நகரங்களைக் கைப்பற்ற ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாகப் போராடி வருகிறது. எனவே, இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் தவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் வான் பரப்பை 'விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி' என அறிவிக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இவ்வாறு அறிவிப்பதன் மூலம், உக்ரைன் மீது பறக்கும் ரஷ்ய போர் விமானங்களை நேட்டோ படையும், அமெரிக்க படைகளும் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால், இது ரஷ்யாவுக்கு எதிராக நேரடி போரில் களமிறங்குவது போலாகும் என்பதால் நேட்டோவும், அமெரிக்காவும் தயங்குகின்றன.
இதனால் விரக்தி அடைந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனிப்பட்ட முறையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடியோ தகவல் ஒன்றை அனுப்பினார். அதில் ஜெலன்ஸ்கி, ''இதுவே நீங்கள் என்னை உயிருடன் பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம். உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலமும், எங்களுக்கு அதிக போர் விமானங்களை வழங்குவதன் மூலமும் உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். அதற்கு உதவ வேண்டும்'' என்றார்.
ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு மிக் ரக விமானங்களை வழங்க தயாராக உள்ளன. ஆனால் அந்த விமானங்களுக்கு மாற்றாக அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்கள் விநியோகத்தை ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்துள்ளன. இதனை விநியோகிக்காமல் அமெரிக்கா தொடர்ந்து தாமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்த போதிலும், தாய்நாட்டை பாதுகாக்க அந்நாட்டு மக்கள் பலர் ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. அப்படியிருக்கையில், பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகையில், ''நாங்கள் ஏன் நாட்டில் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். ரஷ்ய படையை எதிர்த்து போராடி வரும் எங்கள் சகோதரர்களுக்கு துணையாக நாங்களும் போராடுவோம்'' என்றனர். இதுதவிர, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாட்டை சேர்ந்தவர்களும் தாமாக முன்வந்து உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடுவது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் கீவ்வின் வடக்கில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகரில் ரஷ்ய ராணுவம் சக்திவாய்ந்த வெடிகுண்டை குடியிருப்பு பகுதியில் வீசி தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. எப்ஏபி-500 எனப்படும் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை போர் விமானம் மூலமாக வீசியது.
பொதுவாக, இந்த வகை வெடிகுண்டுகள் ராணுவ தொழிற்சாலைகள் மற்றும் ராணுவ கட்டிட கட்டமைப்புகள் மீது வீசப்படும். ஆனால், அதை குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பல குடியிருப்புகள் இடிந்து நாசமாகி உள்ளன. 17 பொதுமக்கள் பலியானதாக கூறப்படுகிறது. வானில் பறந்த ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ காட்சிகளை வெளியிட்ட நிலையில், ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications