"வேண்டாம்.. இல்லையென்றால் நிலைமை மோசமாகும்.." உலக நாடுகளை ஓப்பனாக எச்சரிக்கும் அதிபர் புதின்
மாஸ்கோ: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், அதிபர் புதின் இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த பிப், 24ஆம் தேதி அதிபர் புதின் உத்தரவின்படி ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது போரை ஆரம்பித்தது.
இந்த போர் இப்போது ஒரு வாரத்தைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது இப்போது ரஷ்யா குறிவைத்து, தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

பொருளாதாரத் தடைகள்
ரஷ்யாவின் இந்த மூர்க்தனமாக நடவடிக்கை போர் நடவடிக்கையை யாருமே எதிர்பார்க்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரம் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்தப் போர் உலக பொருளாதாரத்தை மீண்டும் கடுமையாகப் பாதிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனால் பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.

அதிகரித்தே வருகிறது
பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளுடன் ஐரோப்பாவில் உள்ள புதின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் சொத்துகளை முடக்கவும் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், இந்தப் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவைத் தடுப்பதாகத் தெரியவில்லை. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா தொடர்ந்தே வருகிறது. சொல்லப்போனால், அதன் தீவிர தன்மை அதிகரித்தே வருகிறது.

அதிபர் புதின்
இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களைத் தனது நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் நிலைமையை மோசமாக்கவே மாற்றுவதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக ரஷ்ய அரசின் ரோசியா 24 செய்தி சேனலில் புதின் அளித்த பேட்டியில், "எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக எங்களுக்கு எந்த தவறான நோக்கமும் இல்லை. எனவே, அண்டை நாடுகள் தேவையில்லாத பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது.

மோசமாக்கவே செய்யும்
இதுபோன்ற பொருளாதாரத் தடைகள் நிலைமையை மேலும் மோசமாகவே மாற்றும். இப்போதுள்ள சூழலில், நாடுகளுக்கு இடையேயான உறவை எப்படி இயல்பாக்குவது, ஒத்துழைப்பைப் பேணுவது என்பது குறித்துத் தான் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சில முன்னாள் சோவித் நாடுகளின் செயல்பாடுகள் ரஷ்யாவின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாலேயே இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
Recommended Video

ரஷ்யா விளக்கம்
அமெரிக்கா தொடங்கிப் பல சர்வதேச நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், அதிபர் புதினின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா வலுவாக உள்ள நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பிவில் இருக்கும் நேட்டோ படைகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தும் ரஷ்யா, இந்தப் பிரச்சினையை ஆழத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications