ஸ்னோடனை "வீழ்த்த" அன்னாவை ஏவிய ரஷ்யாவின் கேஜிபி!
மாஸ்கோ: அமெரிக்க உளவுத்துற தகவல்களை லீக் செய்து பரபரப்பை ஏற்படுத்தி நாட்டை விட்டு வெளியேறி தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள எட்வர்ட் ஸ்னோடனை நிரந்தரமாக ரஷ்யாவிலேயே முடக்கி வைப்பதற்காக சில ரகசிய வேலைகளை ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபி செய்த சில வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
முன்னாள் கேஜிபி உளவாளியான அன்னா சேப்மேன் மூலமாக ஸ்னோடனை மயக்கி அவரைத் திருமணம் செய்ய வைத்து, நிரந்தரமாக ரஷ்யாவிலேயே அவரை முடக்கிப் போட ரஷ்யா திட்டமிட்டிருந்தது. இதை கேஜிபியின் முன்னாள் முக்கியத் தலைவரான போரிஸ் கர்பிச்கோவ் வெளியிட்டுள்ளார்.

ஆனால் அன்னா வீழ்த்திய வலையில் ஸ்னோடென் விழவில்லையாம். அன்னா பகிரங்கமாக தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் ஸ்னோடன் நிராகரித்து விட்டாராம்.
அமெரிக்கரான ஸ்னோடென் அந்த நாட்டு உளவுத் தகவல்களை வெளியிட்டதால் பெரும் சிக்கலுக்குள்ளானார். அங்கிருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு வந்து தஞ்சமடைந்தார்.
இந்த நிலையில் ஸ்னோடனை நிரந்தரமாக ரஷ்யாவிலேயே முடக்கிப் போட ரஷ்யாவின் கேஜிபி சில ரகசிய வேலைகளைத் செய்தது அம்பலமாகியுள்ளது. அதாவது தனது மாஜி உளவாளியான அன்னாவை வைத்து ஸ்னோடனை மயக்கி அவர்களைத் திருமணம் செய்ய வைப்பது, அதன் மூலம் ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்குவது. இதன் மூலம் ஸ்னோடன் ரஷ்யாவை விட்டு வெளியேற முடியாமல் தடுப்பது என்பதே அந்தத் திட்டம். ரஷ்யக் குடியுரிமை பெற்று விட்டால், அரசின் அனுமதியின்றி வெளியேற முடியாது என்பதால் ஸ்னோடனை நிரந்தரமாக ரஷ்யாவிலேயே தடுத்து வைக்கலாம் என்பது ரஷ்யாவின் திட்டமாம்.
இந்தத் தகவல்களை போரிஸ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜிபி தலைமையிலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்தே ஸ்னோடனுக்கு வலை விரிக்க ஆரம்பித்தார் அன்னா. இதுதொடர்பாக அவர் பகிரங்கமாக டிவிட்டரில், என்னைத் திருமணம் செய்து கொள்ள தயாரா ஸ்னோடன் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஸ்னோடன் பின்விளைவுகளை யோசித்துப் பார்த்து இந்த வலையில் விழவில்லை.
அன்னாவும், ஸ்னோடனும் ஒரே ஒருமுறைதான் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் பின்னர் அவர்களுக்கு இடையே சந்திப்பு நிகழவில்லை என்றார் அவர்.
அன்னா, கேஜிபி அதிகாரி ஒருவரின் மகள் ஆவார். இவர் லண்டனில் முன்பு உளவு பார்த்துள்ளார். அதேபோல 2009ம் ஆண்டு நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்தார்.
அன்னா மற்றும் மேலும் 9 ரஷ்ய உளவாளிகளுக்கு உதவி வந்த ரஷ்ய கேஜிபி ஏஜென்ட் ஒருவர் இங்கிலாந்தில் வைத்து அவர்களை காட்டிக் கொடுத்து விட்டு அமெரிக்காவுக்குத் தப்பி ஓடி விட்டார். இதனால் இவர்கள் 10 பேரும் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் ரஷ்யாவின் கோரிக்கையின் பேரில் இந்த பத்து பேரையும் இங்கிலாந்து நாடு கடத்தியது. இங்கிலாந்தில் வசித்து வந்தபோது இங்கிலாந்துக்காரர் ஒருவரை அன்னா திருமணம் செய்திருந்தார். ஆனால் அவரை பின்னர் விவாகரத்து செய்து விட்டார்.












Click it and Unblock the Notifications