துபாயில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளுடன் நடந்த சபரி இந்தியப் பள்ளியின் ஆண்டு விழா
துபாய்: துபாயில் சபரி இந்தியப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா 30.01.2014 அன்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
துபாயில் சபரி இந்தியப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதலாம் ஆண்டு விழா கடந்த 30ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைவர் ஆர்.வி. ரமணி தலைமை வகித்தார்.
கல்விக்குழு இயக்குநர்கள் மாலதி ரங்கராஜன், நித்யா ராமசாமி, எக்சிகியூட்டிவ் இயக்குநர் சம்சுதீன் கஜினி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
குத்துவிளக்கு
விழாவின் துவக்கமாக குத்துவிளக்கினை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றினர். முதல்வர் பமீலா கோஷ் ஆண்டறிக்கையை வாசித்தார். மேலும் பள்ளி மேற்கொண்டு வரும் பல்வேறு கல்வி மேம்பாட்டுப் பணிகளை விவரித்தார்.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினராக பரோடா வங்கியின் வளைகுடா பிராந்திய தலைமை நிர்வாகி கே.வி. ராமமூர்த்தி பங்கேற்று உரை நிகழ்த்தினார். வரும் காலங்களில் கல்வி மேம்பாட்டிற்கும் தங்களது வங்கி பங்களிப்பினை வழங்கும் என தெரிவித்தார்.
கலை நிகழ்ச்சிகள்
மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர்களையும், பெற்றோர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தன.
நிகழ்ச்சியில் சமூக சேவகியும், தமிழ் ஆர்வலருமான ஜெயந்திமாலா சுரேஷ், ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சபரி பள்ளி
பசுமையை நோக்கி எனும் தாரக மந்திரத்துடன் இப்பள்ளி வெற்றி நடைபோட்டு வருவதாக பள்ளி முதலவர் பமீலா தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில் சிபிஎஸ்இ - ஐ பாடத்திட்டப்படி ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் 250 பேர் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.