யோகாவும் விளையாட்டின் ஒரு அங்கம் தான்.. ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் தரும் சவுதி!
யோகா விளையாட்டின் ஒரு அங்கம் தான் என்று கூறி அதை விளையாட்டுப் பட்டியலில் சவுதி அரேபிய அரசு சேர்த்துள்ளது.
ரியாத்: சவுதியின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் யோகாவை விளையாட்டின் ஒரு பாகம் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இஸ்லாமிய மக்கள் இனி அரசின் அங்கீகாரத்துடன் யோகாசனம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் நாடு முழுவதும் யோகாவின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என ஐ.நா. சபைக்கு இந்தியா கோரிக்கை விடுத்ததையடுத்து ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. யோகாவின் சிறப்பை உணர்ந்த சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை விரும்பி செய்து வருகின்றனர்.
ஒதுக்கி வைத்த சவுதி
ஆனால் மதம் சார்ந்த சிந்தனைகளில் ஊறிப் போயிருந்த சவுதி அரேபியா மட்டும் யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்தது. இந்நிலையில் சவுதி அரசும் யோகாவை விளையாட்டின் ஒரு அங்கமாக நேற்று அங்கீகரித்துள்ளது.
பட்டியலில் சேர்ப்பு
சவுதியின் வர்த்தக மற்றும் தொழில்துறை இந்த தகவலைக் கூறியுள்ளது. யோகாவிற்கு விரைவில் அரசிடம் இருந்து அங்கீகாரம் பெறப்படும் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
யோகா செய்ததால் ஃபட்வா
ஜார்க்கண்டை சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் யோகா பயின்றதால் அவரை இந்த சமுதாகத்தினர் 2 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்தேதோடு அந்தப் பெண்ணிற்கு ஃபட்வாவும் கொடுத்துள்ளனர். பாபா ராம் தேவிடம் யோகா கற்றுக் கொண்ட ரபியா என்ற பெண் இந்தத் தகவலைக் கூறி இருந்தார்.
ஆச்சரியமூட்டும் சவுதி
இத்தகைய சூழலில் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளில் தீவிரமாக இருக்கும் சவுதி அரேபியாவே யோகாவை விளையாட்டின் ஒரு அங்கமாக சேர்த்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. அண்மைக் காலமாக தீவிர இஸ்லாம் என்ற கொள்கையை கைவிட்டு சவுதி பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.