சவுதி அரேபியாவில் வீட்டில் பயங்கர தீ.. 10 இந்திய தொழிலாளர்கள் உள்பட 11 பேர் பலி
ரியாத்: சவுதி அரேபியாவின் தென் மேற்கு நகரமான நஜ்ரானில் உள்ள ஒரு வீட்டில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய கட்டடம் என்பதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிளையும் தூதரகம் செய்யும் என தெரிவித்துள்ளார்.