வாட்டும் வாட் வரி... சவுதியில் இருந்து வெளியேற தயாராகும் லட்சக்கணக்கான இந்தியர்கள்
லட்சக்கணக்கான இந்தியர்கள் சவுதியில் இருந்து வெளியேற தயாராகி வருகின்றனர். காரணம் வரி, பொருளாதார நெருக்கடிதான்.
குவைத்: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் பணம் சம்பாதிக்க சவுதி அரேபியா சென்றவர்கள் அங்கு அமலாக உள்ள புதிய வரியினால் சொந்த நாடுகளுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணை வளம் மிகுந்த நாடு சவுதி அரேபியா. அங்கு லட்சக்கணக்கான வெளி நாட்டினர் தங்கி பணி புரிகின்றனர். இந்தியர்கள் மட்டும் 41 லட்சம் பேர் உள்ளதாக தெரிவிக்கிறது புள்ளி விபரம்.
இந்தியாவில் ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக உள்ளது. இது நாட்டின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதே போல சவுதியில் புதிய வாட் வரி ஜூலை 1 முதல் அமலாக உள்ளன. அங்கு வருமான வரி இல்லை என்றாலும் வாட் வரிதான் இந்திய தொழிலாளர்களை வாட்டி வதைக்கப் போகிறது.
ஜூலை 1 முதல் வரி
சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கியிருக்கும் தொழிலாளியின் மனைவிக்கு மாதம் 100 ரியால் செலுத்த வேண்டும். இது வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
குடும்ப விசா
மாதம் 5 ஆயிரம் ரியால் அதாவது ரூ.90 ஆயிரம் சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு சவுதி அரேபிய அரசு குடும்ப விசா வழங்குகிறது. அதன்படி அங்கு தங்கியிருக்கும் தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு என 3 பேருக்கு மாதம் 300 ரியாஸ் அதாவது இந்திய ரூபாயில் ரூ.5400 செலுத்த வேண்டும்.
கட்டுபடியாகாத வரி
இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. அடுத்த ஆண்டு மாதம் ஒரு நபருக்கு 200 ரியால், 2019ஆம் ஆண்டு மாதம் 300 ரியால், 2020 ஆண்டு மாதம் 400 ரியால் என அதிகரிக்கிறது. இது பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கட்டுபடியாகாது.
நாடு திரும்ப முடிவு
கடந்த 4 மாதங்களாக இந்தியர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை அங்கிருந்து அனுப்பி வைக்க தொடங்கி விட்டனர். மீண்டும் பேச்சிலர் வாழ்க்கைக்கு மாறி வருகின்றனர். இதுநாள்வரை குடும்பத்துடன் உற்சாகமாக செலவிட்டவர்கள் தனியாக வசிக்க சங்கடப்பட்டு அவர்களும் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
எப்படி சேமிப்பது?
வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் பானங்கள் மற்றும் புகையிலையின் விலை 100 சதவீதம் உயருகிறது. அதனால் சாதாரணமாக சம்பளம் வாங்கும் இந்தியர்கள் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. வாங்கும் சம்பளம் முழுவதையும் இங்கேயே செலவழித்து விட்டால் எப்படி சேமிப்பது, சொந்த ஊருக்கு எப்படி அனுப்புவது என்ற கவலை இந்தியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
தாய் நாடு திரும்பும் இந்தியர்கள்
கச்சா எண்ணையின் விலை குறைந்து விட்டது. இதனால் அங்கு பெரும்பாலான கம்பெனிகள் மூடப்பட்டு வருகின்றன.
இதனால் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. பொதுவாக அங்கு ஐ.டி. கட்டுமானம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளில் பெரும்பாலான இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பளத்திற்கு ஏற்ப செலவும் அதிகரித்து வருவதால் பெரும்பாலான இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் முடிவில் உள்ளனர்.
கத்தாரிலும் பாதிப்பு
சவுதி அரேபியா மட்டுமல்ல கத்தார், வளைகுடா நாடுகள் அனைத்துமே வாட் வரியை அமல்படுத்த உள்ளன. இங்கு பணிபுரியும் இந்தியர்கள்தான் வாட் வரியை எண்ணி வாடி வதங்கி போய் உள்ளனர். வரியின்றி வாழ்க்கை நடத்தி லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்தனர். இனி எத்தனை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பப் போகிறார்களோ?