துபாயில் பில்வா இந்திய பள்ளியை திறந்து வைத்த மத்திய அமைச்சர் சரத் பவார்
துபாய்: துபாயில் பில்வா இந்தியப் பள்ளி திறப்பு விழா அல் கிஸஸ் பகுதியில் 1.03.2014 அன்று மாலை வெகு சிறப்புற நடைபெற்றது.
இந்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத்பவார் இப்பள்ளியினை திறந்து வைத்தார். ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பிரபாகர் கோரே, வர்த்தகப் பிரமுகர் டாக்டர் பி.ஆர். ஷெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இப்பள்ளி இந்திய கலாச்சாரம் மற்றும் விழுமங்களைக் கொண்ட உலக தரத்திலான கல்வியினை வழங்கும் என டாக்டர் கோரே தெரிவித்தார்.
பள்ளியின் முதல்வர் ரிச்சர்ட் மோன்ட்டெய்ரோ சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டத்திட்டப்படி கேஜி, 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும் பாடங்களுடன் மாணவர்கள் திறமையானவர்களாக எதிர்காலத்தில் வர உதவியாக பல்வேறு சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார்.
பள்ளியின் இயக்குநர் அல் முஹம்மது அல் ஜஃப்லா அல் ஹைமரி தனது உரையில், திறமையான ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் போட்டி நிறைந்த உலகில் அவற்றை எதிர்கொள்ள வசதியாக இப்பள்ளி திட்டங்களை வகுத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.