மததலைவர் தான் இலக்கு.. ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்று கைதான மாஜி கடற்படை வீரர் பரபர வாக்குமூலம்
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த முன்னாள் கடற்படை வீரர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். முதலில் அவர் மததலைவர் ஒருவரை குறிவைத்ததாக கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே கடந்த 2020ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் நேற்று நாரா பகுதியில் ஷின்சோ அபே மக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த நபர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்சோ அபேயின் உடலில் குண்டுகள் பாய்ந்தன.
ஜப்பான் கடும் துப்பாக்கி சட்டத்தை மீறி ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்றது எப்படி? வெளியான திடுக் தகவல்
ஷின்சோ அபே மரணம்
இதையடுத்து ஷின்சோ அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஷின்சோ அபேயின் இந்த படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
மாஜி கடற்படை வீரர் கைது
இதற்கிடையே ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட நபரை உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் டெட்சுயா யமகாமி (வயது 41) என்பதும், அவர் ஜப்பானிய கடற்படையின் தற்காப்பு படையின் வீரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் ஷின்சோ அபேவின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சொந்தமாக துப்பாக்கி தயாரித்து அவரை சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகின.
வாக்குமூலத்தில் திடுக் தகவல்
இந்நிலையில் தான் கைதான டெட்சுயா யமகாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது சம்பவம் குறித்து டெட்சுயா யமகாமி வாக்குமூலம் அளித்துள்ளது. இந்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாக கியோடா செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி விசாரணையின்போது திட்டமிட்டு ஷின்சோ அபேவை கொலை செய்ததை கைதான நபர் மறுத்துள்ளார். அதேநேரத்தில் தான் மததலைவர் ஒருவருக்கு அவர் குறிவைத்ததாக கூறியுள்ளார்.
பணம் பறித்ததால் ஆத்திரம்
கைதான டெட்சுயா யமகாமியின் தாயிடம் இருந்து நன்கொடை என்ற பெயரில் ஒரு அமைப்பை சேர்ந்த தலைவர் (மதசார் அமைப்பு) ஒருவர் பணம் பறித்துள்ளார். அவர் ஷின்சோ அபேயுடன் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில் ஷின்சோ அபே குண்டு பாய்ந்தது இறந்ததாக போலீஸ் விசாரணையில் அவர் கூறியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அடிக்கடி வேலைமாற்றம்
கைதான நபர் 2005 காலக்கட்டத்தில் கடற்படையில் பணியாற்றினார். குரே தளத்தில் பணியாற்றிய பிறகு அங்கிருந்து வெளியேறினார். அதன்பிறகு பல வேலைகளுக்கு சென்றவர் அடிக்கடி தனது பணியை மாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த டெட்சுயா யமகாமி அந்த வேலை பிடிக்காமல் மே மாதம் நின்ற நிலையில் நேற்று ஷின்சோ அபேவை கொலை செய்துள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.