செவ்வாய் கிரக பாறைகளை கரைக்கும் அமில பனிப்படலம்
நாசா: செவ்வாய் கிரகத்தில் அமிலப் பனிப்படலம் இருப்பதாகவும், அது அங்குள்ள பாறைகளை கரைப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதை நாசா ஏற்கனவே அங்கு அனுப்பி வைத்து தற்போது செயலிழந்து போய் விட்ட விண்கலமான ஸ்பிரிட் ரோவர் விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஹஸ்பன்ட் ஹில் என்ற மலைப் பகுதியில் உள்ள ஹில்லாரி என்ற பாறையை ஆய்வு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமில பனிப்படலம்...
செவ்வாய் கிரகத்தின் பல பகுதிகளில் இந்த அமில பனிப்படலம் நிலவுவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது. இதன் காரணமாக பாறைகளில் உள்ள இடுக்குள் மறைந்து விடுவதாகவும் அது கூறுகிறது.
காரணம்...
செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள சிறிய அளவிலான தண்ணீருடன், அங்குள்ள எரிமலைகளிலிருந்து வரும் அமில வாயுக்கள் சேர்ந்து இந்த அமில பனிப்படலத்தை உருவாக்குவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆப்பர்சூனிட்டி விண்கலம்...
தற்போது நாசாவின் ஆப்பர்சூனிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் 26.2 மைல் தூரத்தைக் கடந்து போயுள்ளது. இது 2004ம் ஆண்டு அனுப்பப்பட்டது. 3 மாதம் இதன் ஆயுள் காலமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பத்து வருடத்திற்கும் மேலாக அது செயல்பட்டு வருகிறது.
மெதுவான நிகழ்வு...
செவ்வாய் கிரகத்தில் அமில பனிப்படலம் உரசுவது மிகவும் மெதுவான நிகழ்வாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கடந்த பல நூறு ஆண்டுகளாக இது நடந்து வருகிறதாம்.
ஜெல்...
இந்த பனிப்படலம் காரணமாக உருவாகும் ஜெல் மலமாக பாறைகளின் உடைந்த பகுதிகள் ஒட்ட வைக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும் பல பாறைகளை இது கரைத்து விடுகிறதாம்.