வரலாற்றுச் சாதனை: விண்வெளியில் ரவுண்ட் அடித்துவிட்டு பூமிக்குத் திரும்பியது ‘ஒலிம்பிக் ஜோதி’
மாஸ்கோ: விண்வெளியில் காட்டப் படுவதற்காகக் கொண்டு செல்லப் பட்ட ஒலிம்பிக் ஜோதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்துள்ளது.
வரும் 2014ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் நாள் ரஷியாவில் கருங்கடல் கடற்கரையோரமாக அமைந்துள்ள சோச்சி நகரில் 22 ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கிறது. அப்போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, வெற்றிகரமாக பூமிக்குத் திருப்பிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது வரலாற்றுச் சாதனை என உலகநாடுகள் ரஷ்யாவைப் பாராட்டியுள்ளன.
சர்வதேச விண்வெளி மையம்...
கடந்த வாரத்தில் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் ஜோதி முதன்முறையாக பூமியில் இருந்து 420 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் வெளியே காண்பிக்கப்பட்டது.
விண்வெளி வீரர்....
இதனை ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கோடோவ் விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து மிதந்தபடி, ஒலிம்பிக் ஜோதியை உயர்த்திப் பிடித்தார். அவரது கைகளிலிருந்து ஒலிம்பிக் ஜோதி நழுவி விடாதபடி, அது அவருடைய உடையோடு சேர்த்து தைக்கப் பட்டிருந்தது.
விடியோ...
ஒலெக் ஒலிம்பிக் ஜோதியைக் காட்டுவதை அவரது சக விண்வெளி வீரர் செர்ஜி ரையாஸன்ஸ்கை விடியோவாக எடுத்தார். இக்காட்சியை ரஷிய தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.
அழகோ அழகு....
கோடோவ் ஒலிம்பிக் ஜோதியைப் பெருமையுடன் அசைத்த போது, அதனைப் பார்த்து ரையாஸன்ஸ்கை மிக அழகாக இருக்கிறது என வர்ணித்தார். ஆனால், விண்வெளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படாமல் தான் காட்டப் பட்டது.
ரஷ்யாவுக்கு இணை ரஷ்யா தான்...
'இந்தத் தருணம் நிகழ்வதை நம்பமுடியவில்லை. இதை சாத்தியமாக்க ரஷியாவால் மட்டுமே முடியும். அறிவியலிலும் விளையாட்டிலும் ரஷியாவுக்கு இணை ரஷியாதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது' என தொலைக்காட்சியில் நேரசி காட்சிகளை ஒளிபரப்பிய வர்ணனையாளர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.
முதன்முறையாக....
ஏற்கெனவே 1996 அட்லாண்டா ஒலிம்பிக் மற்றும் 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளின் போது அமெரிக்க விண்கலம் மூலம் ஒலிம்பிக் ஜோதி விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அப்போது அது, சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) வெளியே கொண்டு வரப்படவில்லை. இப்போது முதன்முறையாக ரஷ்யா வெளியே கொண்டு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
வெற்றிகரமாக....
இந்நிலையில், வெற்றிகரமாக தனது விண்வெளி சுற்றுப்பயணத்தை முடித்து வெற்றிகரமாக 3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது ஒலிம்பிக் ஜோதி.
பங்கேற்கவில்லை...
1980ஆம் ஆண்டுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரஷியா தற்போதுதான் நடத்துகிறது. 1980 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மாஸ்கோவில் நடைபெற்றாலும், சோவியத் ரஷியா ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பை மேற்கொண்டதால், மேற்கத்திய நாடுகள் பெரும்பாலானவை அப்போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.