அமெரிக்காவில் பாக். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 'நோஸ் கட்' கொடுத்த சுஷ்மா சுவராஜ்!
நியூயார்க்: சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களில் கூட்டத்திலிருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாதியிலேயே வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
73 வது ஐக்கிய நாடுகள் சபை பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐநா உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க் சென்று உள்ளனர்.
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் சார்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
வெளியுறவு அமைச்சர்கள்
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான 'சார்க்' நாடுகளை சேர்ந்த அனைத்து வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இதில் பங்கேற்றுளளனர் என்பதால், இன்று சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான அதிகாரப்பூர்வமற்ற ஒரு சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளம்பிவிட்டார்
இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தியா சார்பிலான கருத்துக்களை வலியுறுத்தி விட்டு சுஷ்மா ஸ்வராஜ் வெளியே கிளம்பி சென்றுவிட்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷா மெகமூத் குரேஷி, இதுபற்றி கூறுகையில், சுஷ்மா சுவராஜ் பாதியிலேயே வெளியேறியது உண்மைதான். ஒருவேளை அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
சந்திப்பு தேவையில்லை
சுஷ்மா சுவராஜ் மட்டுமல்ல அவருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட வெளியேறி இருந்தனர். இருப்பினும் சுஷ்மா சுவராஜ் வெளியேறுவதற்கு காரணம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனான மரியாதை நிமித்தமான பேச்சுவார்த்தையை கூட தவிர்ப்பது தான் என்று கூறப்படுகிறது.
இந்தியா புறக்கணிப்பு
ஏனெனில் அமெரிக்காவில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காஷ்மீரை சேர்ந்த 3 போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது, மற்றும் தீவிரவாதி புர்கான் வானிக்கு தியாகி என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தானில் தபால் தலை வெளியிட்டது ஆகிய செயல்பாடுகளால் கோபம் அடைந்த இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பாக். பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
["சிறிய மனிதர்கள் பெரிய பதவிக்கு வந்தால் இப்படித்தான்.." இந்திய அரசு மீது இம்ரான் கான் கடும் கோபம் ]