ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் சேதமடைந்தனவா? கேள்வி எழுப்பும் படங்கள்
சிரியாவில் நடைபெற்று வரும் போரில், கிளர்ச்சியாளர் தரப்பினர் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த ரஷ்ய போர் விமானங்களின் படங்களை ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ராணுவ புகைப்படக் கலைஞர் வெளியிட்டுள்ளார்.
அந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியானதும், ரோமன் சபன்கோவ் அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 31 அன்று மெய்மிம் விமானத் தளத்தில் அத்தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அதில் ஜெட் விமானங்கள் சேதமடைந்ததை மறுத்திருந்தது.
அந்தத் தாக்குதலில் இரு ரஷ்ய படையினர் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அமைச்சகம் உறுதிப்படுத்தி இருந்தது.
அந்தத் தாக்குதலில், நான்கு எஸ்.யு-24, ஒரு ஏ.என்-72, ஒரு ஏ.என்-30 ஆகிய, ரஷ்யாவுக்கு சொந்தமான ஏழு ஜெட் விமானங்கள் அழிக்கப்பட்டதாக கொம்மெர்சாண்ட் எனும் ரஷ்ய நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.
நம்பத்தகுந்த, அநாமதேய மூலங்களிடம் இருந்து அந்தப் புகைப்படங்கள் தமக்கு கிடைத்ததாக ரோமன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தாங்கள் தீவிரவாதிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா தொடர்ந்து கூறினாலும், ரஷ்ய தாக்குதல்களில் குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த விமான தளத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
நீண்ட தூரத்தில் உள்ள விமானங்களை வழிமறித்து தாக்கும் ஏவுகணைகளை அந்த தளம் கொண்டிருந்தாலும், கிளர்ச்சியாளர்கள் நெருங்கிய தூரத்தில் இருந்து தாக்கியதால் அவர்களை தடுக்க முடியாமல் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- தண்ணீர், மின்சார கட்டணம் செலுத்தக் கோரி செளதி இளவரசர்கள் போராட்டம்
- போக்குவரத்து தொழிலாளர்கள் மீது 'எஸ்மா' கோரி பொதுநல மனு
- டிரம்பின் மனநலம் எப்படி இருக்கிறது? சர்ச்சை நூலால் பரபரப்பான விவாதம்