கூடங்குளம் அணுமின் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது... ரஷ்யா தகவல்
மாஸ்கோ: ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் பேரழிவு ஏற்பட்ட பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக கூடங்குளம் அணுமின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அணு ஆற்றல் துறை இயக்குநர் விளாடிமிர் ஏ.ஏஞ்சலோ தெரிவித்துள்ளார்.
ரஷிய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு தொடங்கப்பட்டது. இதற்கு எதிராக பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அணுமின் நிலையத்தினால் தென் தமிழகமே பாதிக்கப்படும் போராட்டக்காரர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், மாஸ்கோவில் உலக அணு சக்தி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் திட்டங்களுக்கான ரஷ்ய அணு ஆற்றல் துறை இயக்குநர் ஏஏஞ்சலோ, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின் மூலம் எங்களுக்கு சில அனுபவம் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அணு மின் நிலையத்தின் 3, 4-ஆவது அணு உலைகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல மாற்றங்களைச் செய்துள்ளோம். குறிப்பாக நில அதிர்வை தாக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களை செய்துள்ளோம். இதற்காக அதிகமாக செலலவாகிறது என்ற போதிலும் முதலில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகளை அமைப்பதற்கான வடிவமைப்பைத் தொடங்கிவிட்டோம். 2-ஆவது மின் உலையில் இந்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். முதல் அணு உலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன என்பதால், இரண்டாவது உலையை மிக கவனத்துடன் இயக்க இருக்கிறோம் என்று அவர் கூறினார்.